Chandra Grahan 2023 in India Date and Time : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா தினத்தன்று அதாவது மே 5 ஆம் தேதி நிகழ உள்ளது. அறிவியல் மற்றும் மதக் கண்ணோட்டத்தில் சந்திர கிரகணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக, சந்திரன் மற்றும் சூரியனுக்கு நடுவில் பூமிக்கும் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, ராகு சந்திரனை நேருக்கு நேராக சந்திப்பதை சந்திர கிரகணம் என்கின்றனர். நடைபெற இருக்கும் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. சந்திர கிரகணம் எவ்வளவு காலம் நீடிக்கும், கிரகணத்தின் போது என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
சந்திர கிரகணம் எப்போது? : சந்திர கிரகணம் 2023 மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும் வகையில் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணம் 4 மணி 18 நிமிடங்கள் நிகழும். சந்திர கிரகணம் காலை 8:44 மணிக்கு தொடங்கி மதியம் 1:20 மணி வரை நீடிக்கும். இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். இந்தியாவைத் தவிர, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், வட துருவம் ஆகிய பகுதிகளிலும் தெளிவாக தெரியும்.
கிரகணம் மற்றும் இந்து பழக்கவழக்கங்கள் : இது ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், இந்தியக் கலாச்சாரத்தின்படி கிரகணம் மிகப் பெரிய புராண மற்றும் ஜோதிடப் பொருத்தத்தைக் கொண்டுள்ளது. விஞ்ஞான சமூகம் அத்தகைய கருத்துக்களை ஆதரிக்காவிட்டாலும், வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை தடுக்க, கிரகணத்தின் போது பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்து பஞ்சாங்கம் கூறுகிறது. அந்த வகையில், கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் : கிரஹணத்தின் போது தியானம் அல்லது தங்களுக்கு பிடித்த கடவுளை பிரார்த்தனை செய்யலாம். இறை வழிபாட்டு மந்திரங்கள் தெரியாவிட்டாலும், “ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாய, ஓம் சரவண பவ” போன்ற எளிய மந்திரங்களை உச்சரிக்கவும் என்கிறது ஜோதிடம். வீட்டைச் சுத்தம் செய்து, கோமியம் - மஞ்சள் - வேப்பிலை ஆகியவற்றை கலந்து தெளிப்பது நன்மை பயக்கும். கிரகணத்திற்குப் பிறகு எப்போதும் குளித்துவிட்டு ஆடைகளை சுத்தம் செய்யுங்கள். கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறை தாக்கங்களைத் தவிர்க்க, உணவுப் பொருட்களில் துளசி இலைகளை போடலாம். நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தவிர மற்றவர்கள் கிரகணத்தின் போது முடிந்தவரை உணவு மற்றும் தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது.
கிரகணத்தின் போது தவிர்க்க வேண்டியவை : கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி பிரார்த்தனை செய்யும் போது மடியில் தேங்காய் வைக்கவும். கிரகணத்தின் போது தூங்குவதையோ குளிப்பதையோ தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும் கிரகணத்தைப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். எந்த வகையான சரீர செயல்களிலும் ஈடுபடுவது நல்லதல்ல. கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பிருந்தே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது. இறைவழிபாட்டு தலங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது.