மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். இந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம் .அனுமன் ஜெயந்தி விழாவான இன்று நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாற்றப்பட்டது. இந்த வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்க்கு பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 2 வது ஜெயந்தி விழா என்பது குறிப்பிடத்தக்கது.