உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன் முதலாக மகான் ஸ்ரீஅரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல் ஆரோவில் குறித்த திட்டம், 'யுனெஸ்கோ' பொது சபையில் இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரம அன்னை ஸ்ரீ மீர்ராவின்பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது.
இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறி இருக்கும் மக்கள் ‘போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ம் ஆண்டு கொண்டாடப்படவில்லை. கடந்த ஆண்டு விழா இருந்தும் கொரோனா தொற்று காரணமாக பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் 600 க்கும் மேற்பட்ட ஆரோவில்வாசிகள் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து பங்கேற்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பெரும் அளவில் குறைந்ததால் 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். 55 வது உதய தினமான இன்று ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்,பொது மக்கள் ஆகியோர் மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 5 மணிக்கு கூடினர். 'போன் பயர்' எனப்படும் அலங்கார தீபம் ஏற்றப்பட்டு 6 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.