உலகளவில் மண் வளம் என்பது மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் என பல விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதேசமயம், நம் மக்கள் தொகை 900 கோடியாக உயரும் எனவும் கூறுகிறார்கள். மக்கள் தொகை அதிகரித்து, உணவு உற்பத்தி குறைந்தால், நாட்டில் உணவு தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். உணவு பஞ்சம் வந்தால் நாகரீகமும், கலாச்சாரமும் மூன்றே நாளில் தொலைந்து போகும். மனித தன்மை காணாமல் போகும்.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் ஜனங்கள் தான் நாயகர்கள். நாயகர்கள் வீட்டில் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் நடக்காது. மண் வளம் அழிந்து வருவது நம் தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கும் பெரிய பாதிப்பாக அமையும். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தப்பட்சம் தினமும் 10 நிமிடங்களாவது மண் வள பாதுகாப்பு குறித்து உங்களுக்கு தெரிந்ததை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் மண் வளம் குறித்து பேச வேண்டும்.
மண் வளத்தை பாதுகாக்கும் சட்டங்களை அரசாங்கள் இயற்ற மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சத்தமாக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்தியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளை கடந்து மண்ணை காக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இந்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு கவனம் கொடுக்க வேண்டும். இதற்கு மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். இவ்வாறு சத்குரு கூறினார்.