பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 22 லட்ச ரூபாய் அதிகரித்திருக்கிறது தெரியவந்திருக்கிறது.
பிரதமர் மோடி, பங்குச் சந்தை முதலீடு அல்லது மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை, அவற்றிற்கு பதிலாக தேசிய சேமிப்பு திட்டத்தில் 8.93 லட்ச ரூபாயும், இன்சூரன்ஸ் பாலிசிகளில் 1.50 லட்ச ரூபாயும், எல் & டி இன்பிரா பாண்ட்களிலும் முதலீடு செய்துள்ளார். எல் & டி பாண்டினை கடந்த 2012ம் ஆண்டில் 20,000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
பிரதமர் மோடி பெயரில் அவருடைய சொந்த ஊரான குஜராத் மாநிலம் காந்திநகரில் செக்டார்-1 401/ஏ என்ற முகவரியில் ஒரு வீட்டடி மனை உள்ளது. 3,531.45 சதுர அடி கொண்ட இந்த மனையை அவர் 2002 அக்டோபர் 25ம் தேதி வாங்கினார். அதாவது அவர் குஜராத் முதல்வராவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர். மேலும் இந்த சொத்து பிரதமரின் தனிப்பட்ட சொத்து கிடையாது, அவருடன் சேர்த்து மேலும் 3 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த மனையின் 25% மட்டுமே பிரதமருக்கு சொந்தமாகும். அவர் வாங்கும் போது இந்த மனையின் மதிப்பு 1.3 லட்சமாகும்.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அனைத்து மத்திய அமைச்சர்களும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் தங்கள் சொத்து மதிப்பினை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் ஒளிவுமறைவின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பிரதமரின் வலைத்தளத்தில் அவருடைய சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.