காசோலை பரிவர்தனையில் மாற்றம் : Positive Pay mechanism for cheques என்ற புதிய நடைமுறை நாளை முதல் வங்கிகளில் அறிமுகமாகிறது. அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் காசோலை (Cheque) வாயிலாகப் பணபரிவர்த்தனை செய்யும் ஒருவர் அந்தக் காசோலை யாருக்கு வழங்கப்படுகிறது, என்ன தேதியில் வழங்கப்படுகிறது, எவ்வளவு தொகைக்கு வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை வங்கிகளுக்குத் தர வேண்டும். வாடிக்கையாளர் அளிக்கும் தகவல்களை வங்கிகள் சரிபார்த்த பின்னரே பணப்பரிவர்த்தனைக்கு அனுமதிக்கும். இதன் மூலம் காசோலை மோசடிகளை பெருமளவு குறைக்க முடியும் என ஆர்.பி.ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறை 5 லட்சம் ரூபாய்க்கு மேல் காசோலை வழியாக பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே கட்டாயம் என விளக்கம் அளித்துள்ள ஆர்.பி.ஐ, மற்றவர்களுக்கு கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.
தொடர்பில்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு : வாடிக்கையாளர் தற்போது டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) வாயிலாகப் பணம் செலுத்தும்போது பின் நம்பர் செலுத்தாமல் 2,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆர்.பி.ஐ, ஜனவரி 1 முதல் அதன் உச்சவரம்பு 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் என கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் எளிமையாகத் தங்களின் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த உச்சவரம்பு (Contactless card transaction limit) உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் வங்கிகளில் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இந்த உச்சவரம்பு அவர் கணக்கில் உயர்த்தப்படும்.
சிறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் முறையில் மாற்றம் : அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் தங்களின் ஜிஎஸ்டி கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் தற்போது மத்திய அரசு மாறுதலைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரூ. 5 கோடிக்கும் கீழ் வருமானம் ஈட்டும் சிறிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதன் மூலம் வருடத்துக்கு 12 முறை கணக்கு தாக்கல் செய்வதற்குப் பதில் நான்கு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது. ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் நிறுவனங்கள் தனித்தனியாக GSTR -1 மற்றும் GSTR - 3B கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமை ஆக்குவதற்காக புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
புத்தாண்டில் அதிகரிக்கும் கார் விலை : மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை உயர்த்த கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி, மாருதி, மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் நாளை முதல் உயரவுள்ளது. இதேபோல், மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், புத்தாண்டில் நீங்கள் வாங்கப்போகும் காரின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.
UPI பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : கூகுள் பே, அமேசான் பே, ஃபோன் பே உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை முதல் (ஜனவரி 1) கூகுள், ஃபோன் பே உள்ளிட்ட பிரைவேட் யூபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப்பரிவர்த்தனை அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும், G Pay பயன்படுத்துபவர்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மாறுதல் : தற்போது எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் மற்றும் பதினாறாம் தேதிகளில் நிர்ணயம் செய்கின்றனர். அதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி சிலிண்டர் விலை ஒவ்வொரு வாரமும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்காததால் உடனடியாக இந்த மாற்றம் இல்லை என்றாலும், விரைவில் இதுவும் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும்போது விலை மாறுபடலாம்.
Landline -ல் இருந்து அழைக்கும்போது 0 சேர்க்க வேண்டும் : ஜனவரி 15 முதல் வீட்டில் உள்ள தொலைபேசியில் (Landline) இருந்து மற்ற கைபேசி அழைப்புகளை அழைக்கும்போது 0 சேர்த்து அழைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைப்படி வீட்டு தொலைபேசியில் இருந்து கைபேசியை அழைத்தால் மட்டுமே 0 சேர்க்க வேண்டும். லேண்ட்லைன் டூ லேண்ட்லைன் (Landline to landline) அல்லது மொபைல் டூ லேண்ட்லைன் (Mobile to landline) பேசும்போது 0 சேர்க்க வேண்டாம்.
வாட்ஸ் ஆப் இயங்காது : சில குறிப்பிட்ட ஆன்ட்ராய்டு iOS உடைய செல்போன்களில் ஜனவரி 1, 2021 முதல் வாட்ஸ் ஆப் (Whats App) இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. i phone s, i phone 5, i phone 5s மற்றும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட செல்போன் மாடல்களில் வாட்ஸ் ஆப் இயங்காது. மேலும், ஆண்ட்ராய்டு(Android) 4.0.3 Operating system-ல் இயங்காத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.