மாநகரங்களில் நீங்கள் ஆட்டோக்களில் பயணிக்கும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்ற அனுபவம் உங்களுக்கும் இருக்கும். உதாரணத்திற்கு 5 கி.மீ. தொலைவுள்ள இடத்தை கடந்து செல்லவே உங்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரைக் கூட ஆகலாம். வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சமயத்தில், இந்த நெருக்கடி எப்போது குறையும், நாம் எப்போது விரைந்து செல்வது என்று உங்களுக்கு எரிச்சல் உணர்வு ஏற்படக் கூடும்.
ஆனால், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சூழலில், ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தவித டென்ஷனும் ஏற்படாமல் இருக்க புனே மாநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செய்கின்ற அற்புதமான காரியம் தான் இப்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்குரிய விஷயமாக மாறியுள்ளது. புனேவைச் சேர்ந்த பிரசாந்த் காம்ப்ளே என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். போக்குவரத்து நெருக்கடியில் நகர்வதற்கு வழியின்றி ஆட்டோ நிறுத்தப்படும்போது புத்தகம் வாசிப்பதை இவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பிரசாந்தின் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் கூட சில சமயம் அவரிடம் இருந்து புத்தகத்தை வாங்கி படிக்கத் தொடங்கினர். இதற்கிடையே, பிரியங்கா சௌத்ரி என்ற பெண்மணியை பிரசாந்த் ஒருமுறை சந்தித்தார். நடமாடும் நூலகம் வைப்பதை ஊக்குவித்து வருகின்ற பிரியங்கா, அதுகுறித்த யோசனையை பிரசாந்திற்கும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் பிரசாந்தின் ஆட்டோவில் சிறு நூலகம் வைப்பதற்கு தேவையான புத்தகங்களையும் அவர் வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரும் (ஆட்டோ) நூலகம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்கள் புத்தகங்களை படித்து பயனுறுகின்ற அதே சமயம், நூலகத்தை மென்மேலும் வளர்த்திட சில புத்தகங்களை நன்கொடையாக கொடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து பிரசாந்த் காம்ப்ளே கூறுகையில், “நான் நடத்தும் மொபைல் நூலகத்தை என் ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். என் ஆட்டோவில் புத்தகம் இருக்கும் ஒரே காரணத்திற்காக பல வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து என்னை சவாரிக்கு அழைக்கின்றனர். பயணிக்கும்போது புத்தகம் வாசிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’’ என்றார்.
மொழியை மேம்படுத்தும் இலக்கு : மக்களுக்கு புத்தக வாசிப்பை கொண்டு சேர்க்கும் அதே சமயம், சாமானிய மக்களிடம் மராத்திய மொழியை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் ஒரு நோக்கமாக உள்ளது என்று பிரியங்கா சௌத்ரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மராத்தி மொழியில் உள்ள சிறப்பான புத்தகங்களை மொபைல் நூலகம் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம். அந்த வகையில் பிரசாந்த் காம்ப்ளே இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்’ என்றார்.
இந்த நடமாடும் நூலகம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பயணத்தின்போது ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிந்தனையை அறிவுத்தேடலை நோக்கி திசைதிருப்புவதாக இது அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.