ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல விதிமுறைகளும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்கும்படியான சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு கல்வியும் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த பெண் ரசியா முராடி , குஜராத் மாநிலத்தில் முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினரை கூட சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். மேலும் பொது நிர்வாகத்தில் 8.60 சதவீதம் (CGPA) மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். இதுவரை இந்தப் பாடத்தில் இதுதான் அதிக மதிப்பெண் என்று கூறப்படுகிறது. இவர் பட்டம் பெற்ற பின்னர், பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால் எந்த துறையிலும் சாதித்து காட்டுவார் என்று தலிபான்களுக்கு செய்தியாக தெரிவித்துள்ளார்
இதுகுறித்து ரசியா முராடி கூறுகையில், ''நான் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி தவறாமல் படித்து வந்தேன். தேர்வுக்கு முன்பு ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார். இவர் தனது படிப்புக் காலத்தில் கோவிட் தொற்றில் மட்டுமின்றி, தலிபான்களிடமும் சிறைபடாமல் தப்பித்தார். தங்கப் பதக்கத்துடன் ஸ்ரத்தா அமபேலால் தேசாய் விருதும் பெற்றுள்ளார்.
தலிபான்களை கடுமையாக சாடிய ரசியா, ''கல்வி பெறுவதில் இருந்து பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்து இருப்பது அவமானத்துக்கு உரியது. இந்திய அரசுக்கும், ஐசிசிஆர், விஎன்எஸ்ஜியு ஆகிய அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதக்கம் கிடைத்து இருந்தாலும், எனது குடும்பத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக பார்க்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தொலைபேசியில் எனது பெற்றோருக்கு இந்த விஷயத்தை தெரிவிப்பேன். அவர்கள் சந்தோசம் அடைவார்கள். நான் ஆப்கானிஸ்தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். உலக சமுதாயமும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நிலைமை சரியான பின்னர் எனது தாய் நாட்டிற்கு செல்லவே விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்