சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். அந்த ரம்மியமான காட்சியை காணும் அனைவருமே அந்த பிரம்மாண்டத்திலிருந்து விடுபட நீண்ட நேரம் எடுக்கும். அந்த அழகான இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை கண்ட உடனே தனது மொபைல் கேமராவை எடுத்து அதனை படம் பிடிக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். ஆனால் எதனால் நமக்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் இவ்வளவு பிடிக்கிறது என்பதை எப்போதாவது யோசித்ததுண்டா? இதைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியை தான் சில ஆராய்ச்சியாளர்கள் குழுவாக சேர்ந்து நடத்தியுள்ளார்கள்.
அழகிய நீல வான காட்சியின் போதும், சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு போன்ற எழில் காட்சிகளின் போதும் மனிதர்களின் மனம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை பற்றி சில ஆராய்ச்சிகளே நடத்தப்பட்டுள்ளன. அவ்வாறு நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகளில் பருவநிலை மாற்றத்திற்கும், தினசரி சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போதும் மனிதர்கள் மனம் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைப் பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதனை எபிமெரல் ஃபெனோமெனா (ephemeral phenomena) என்று அழைக்கிறார்கள்..
நவீன கம்பியூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தி செயற்கையாக செய்யப்பட்ட இயற்கை காட்சிகள் மற்றும் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கும் சூழ்நிலைகள் ஆகியவை 2500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறு காட்டப்பட்ட பல்வேறு இயற்கை காட்சிகளில் பலரும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளை பார்க்கும் போது மிகவும் அழகாக இருப்பதாக தோன்றியதாக கூறியுள்ளனர்.
அதே சமயத்தில் பலருக்கு இந்த காட்சிகளானது மிகவும் அற்புதமாகவும் , சிறிதளவு பயம் தரக்கூடியதாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆங்கிலத்தில் ஆ (awe) என்று அழைக்கப்படும் இந்த உணர்வானது சாதாரணமாக ஏற்படுவது அல்ல. ஆனால் இந்த உணர்வு ஏற்படும் போது அது நமது மனநிலையில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவதோடு மற்றவர்களுடன் பழகுவதையும், நேர்மறை எண்ணங்களையும் தோற்றுவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை தவிர புயல், மழை மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம் ஆகியவற்றை காணும் போதும் பலரும் மிகவும் அழகாக உணர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் எவ்வாறு தங்களது சுற்றுச்சூழலை நேசிக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. அதில் பங்கு பெற்ற நபர்களிடம் இவ்வாறு இயற்கை காட்சியை உண்மையாக காண்பதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிரிமியம் தொகையில் 10% வரை இந்த இயற்கை காட்சிகளை காண செலுத்த தயார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சி குழுவின் அறிக்கையின் படி மக்களின் இது போன்ற மனநிலை, இயற்கை காட்சிகளை பார்க்கும் விதமாக கட்டப்படும் கட்டிடங்கள் ஆகியவற்றின் மதிப்பை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளை பார்த்து ரசிக்கும் போது, நமது மனநிலை நன்றாக இருப்பதாகவும், இயற்கையோடு ஒன்றிணைந்து இருப்பதே ஒரு சிகிச்சை போன்று செயல்பட்டு நமது மனநல ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.