பணியிடத்தில் பெண்கள் சில நேரங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது ஒரு தீவிர பிரச்சனை மற்றும் அது சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றமாக பார்க்கப்படுகிறது.சமீபத்திய ஆய்வின்படி 5-ல் சுமார் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இடத்தில் உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த, அல்லது பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். அதே போல பணியிடத்தில் பெண்கள் மட்டுமே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை சில சமயங்களில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுகின்றனர்.
சக பணியாளரின் தேவையற்ற பாலியல் சீண்டல்கள், பாலியல் சார்ந்த பேச்சுக்கள், கிண்டல், கேலி, பாலியல் நோக்கத்துடன் செய்யப்படும் தேவையற்ற மனதை வேதனைபடுத்தும் நகைச்சுவைகள் உள்ளிட்டவையும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலின் பகுதியாக இருக்கின்றன. மன மற்றும் உடல் ரீதியாக பணியிடத்தில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போல உணர்ந்தால் அல்லது ஆளாக நேரிட்டால் தயங்காமல் குரலை உயர்த்த வேண்டும்.பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க உதவும் பயனுள்ள 5 டிப்ஸ்கள்:
சட்ட உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள் : வேலை செய்யும் இடத்தில் நிகழும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க நீங்கள் முதலில் உங்கள் சட்ட உரிமைகளை புரிந்து கொள்வது அவசியம். இதற்கு ஏதுவாக ஒவ்வொருநிறுவனத்திலும் ஒரு பணியாளர் கையேடு (employee handbook) இருக்கும். இதில் பணியிடத்தில் ஊழியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை போல என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை கோடிட்டு காட்டுகிறது. Sexual Harassment of Women at Workplace Act, 2013 சட்டத்தின் படி, 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க, தடை செய்ய மற்றும் தீர்வுகளை கண்டறிவதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் : பணியிடங்களில் நடக்கும் உங்களுக்கு பிடிக்காத சில விஷயங்களுக்கு ஓவர் ரியாக்ட் செய்வதாக அல்லது சென்சிட்டிவாக இருப்பதாக உங்களுக்கு நீங்களே நினைத்து கொண்டு அவற்றை கடந்து செல்லாதீர்கள். உங்கள் மனதில் தோன்றும்உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்களுக்கு தவறாக தோன்றும் விஷயங்கள் நிச்சயம் தவறு தான் என்ற உறுதியான நிலைப்பாட்டை வைத்திருங்கள். ஆனால் பலர் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி தவறை கூட வெளிப்படையாக சொல்ல முடியாமல் போராடுகிறார்கள். உங்களுக்கு சங்கடம் தருகிற ஒருவருக்கு அவர் செய்யும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டுவதால் உங்களை பிடிக்காமல் போனால் அதற்கு என்ன செய்ய முடியும்.!! அவர் என்ன நினைப்பார் என்பதை விட உங்கள் மகிழ்ச்சி மற்றும் மனஅமைதியே உங்களுக்கு முக்கியம்.
துணிந்து நில்லுங்கள் : உடல் அல்லது மனரீதியாக உங்களுக்கு சங்கடம், அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகள் நடந்து கொள்ளும் போது நீங்கள் எப்போதும் காட்டும் எதிர்ப்பை விட சத்தமாக, உறுதியான குரலில் அனைவரும் பார்க்கும்படி எழுந்து நின்று அதற்கு எதிராக குரல் கொடுங்கள். அதன் பின்னர் நிச்சயம் குறிப்பிட்ட நபர் உங்களிடம் வாலாட்ட மாட்டார்.
லாயரை தொடர்பு கொள்ளுங்கள் : பணியிடத்தில் உங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் யாரேனும் கொடுத்தால் தயங்காமல் உடனடியாக நிறுவனத்தின் இன்டர்னல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டியில் (internal complaints committee) புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அல்லது உரிய நீதி வழங்கப்படவில்லை என நீங்கள் உணர்ந்தால் தாரளமாக நீதிமன்றத்திற்குச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு. சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்து செல்ல ஆலோசனைக்கு நீங்கள் ஒரு லாயரை தொடர்பு கொள்ளுங்கள்.
ஆவணம் மற்றும் அறிக்கை : நீங்கள் சந்திக்கும் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலையும் சகித்து கொண்டு காலத்தை கடத்தாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புகாரளித்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். என்ன சம்பவம், யார் யாரால் துன்புறுத்தப்பட்டார்கள், இடம், தேதி மற்றும் நேரம், அத்துடன் சாட்சிகள் இருந்தால் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை விளக்கமாக புகாரில் குறிப்பிட வேண்டும். முக்கியமாக நீங்கள் அளிக்கும் புகாரின் நகல் ஒன்று உங்கள் வசம் இருக்க வேண்டும்.