பருவநிலை மாற்றங்களால் நாம் ஏற்கனவே பல விதமான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறோம். அளவுக்கு அதிகமான வெப்பம், திடீரென்று கொட்டித் தீர்க்கும் யால் ஏற்படும் வெள்ளம் என பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறோம். நிலப்பரப்பு, வனம் மட்டுமல்லாமல் கடற்கரைகளும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றன. வட ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா நாட்டில் உள்ள கடற்கரைகள் மிகவும் அழகானவை. ஆனால், சமீப காலமாக கடற்கரையில் மணல் பரப்பு மறைந்து பாறைகள் தென்பட தொடங்கியுள்ளன.
கடற்கரைகளில் அளவுக்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், கடல்மட்டம் அதிகரிப்பு, ஆறுகளுக்கு குறுக்கே கட்டப்படும் எண்ணற்ற அணைகளால் கடலுக்கு மணல் வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அணைகளை கட்டி நீர் சேமிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மதிப்புமிக்க தண்ணீர் வளத்தை காக்கும் முயற்சியில், கடல்மண் வளத்தை இழக்க நேரிடுகிறது. கடலை நோக்கி வருகின்ற தண்ணீருடன் சேர்ந்து வரும் மணலை அணைகள் தடுத்து விடுவதால் கடற்கரையில் பாறைகள் தென்பட தொடங்கியுள்ளன.
கடற்கரையில் பாறைகள் தென்படுவதால் இப்போதெல்லாம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை. அவ்வளவு ஏன் கடற்கரைக்கு பொதுமக்களின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு, உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி துனிசியா நாட்டில் 85% மக்கள், அதாவது 12 மில்லியன் மக்கள் கடற்கரையோரங்களில் வசித்து வருகின்றனர். கடற்கரைகளில் பாறைகள் தென்படுவதால் இவர்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
உலகெங்கும் பாதிப்பு : துனிசியா நாட்டு கடற்கரைகளில் மட்டும் மணல் அரிப்பு ஏற்படவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகரமான தகவல்களை கொண்டிருந்தன. உலகில் மணல் பரப்பு நிறைந்த கடற்கரைகளில் 50%-ற்கும் மேற்பட்டவை இந்த நூற்றாண்டின் முடிவில் அழிவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது.
பல வளரும் நாடுகள், கடற்கரை சுற்றுலாவை நம்பியுள்ள நிலையில், இந்த மாற்றங்களால் சுமார் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடற்கரைகளில் சுமார் 60% மணல் பரப்பு அரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை ஒட்டிய இந்திய பெருங்கடலில் சுமார் 100 - 200 மீட்டர் வரையிலும் கடல் பரப்பளவு உள்வாங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.