நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் போதும், போட்டி நடத்தும் நாட்டில், விளையாட்டு கிராமம் ஒன்று புதிதாக உருவாக்கப்படும். விளையாட்டுக்காக நாட்டிற்கு வரும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் தங்குவதற்காக, ஒரு தற்காலிக குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், சாப்பாட்டு கூடங்கள், பொழுதுபோக்கு வசதிகள் கொண்டு உருவாக்கப்படும்.
நிகழ்வுகள் முடிந்த பிறகு, இந்த கிராமங்களில் பெரும்பாலானவை அப்படியே கைவிடப்படும். இருப்பினும் , உலகெங்கிலும் உள்ள சில ஒலிம்பிக் கிராமங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றி மக்கள் பார்வைக்கு விடுகின்றனர். அதோடு அங்கு நடந்த விளையாட்டுகளின் வரலாற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அப்படியான சில ஒலிம்பிக் கிராமங்களைத் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
ஒலிம்பியாபார்க் பெர்லின்: 1936 ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற இந்த இடம் தற்போது பெர்லின் நகரத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. விளையாட்டு முடிந்த பின்னர் மூடப்பட்ட இந்த இடம், 2004 இல் மீண்டும் திறக்கப்பட்டது, அதன் பிறகு இது சுற்றுலா பயணிகளுக்கான இடமாக மாறிவிட்டது. உங்களுக்கு வழிகாட்டும் வகையில் கிராமம் முழுவதும் ஏராளமான வழிகாட்டி பலகைகள் உள்ளன. பார்வையாளர் மையம் அல்லது ஒலிம்பிக் கிராமத்தின் இணையதளத்தில் உங்கள் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
வான்கூவர் ஒலிம்பிக் கிராமம்: ஃபால்ஸ் க்ரீக் பகுதியில் அமைந்துள்ள இது 2010 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டது, ஆனால் சுற்றுலா பயணிகள் பார்வையிட, சில்லறை விற்பனைக் கடைகள், உணவகங்கள் ஆகியவை உள்ளன. அது மட்டும் இல்லாமல் இங்குள்ள நீர் நிலையத்தில் கயாக்கிங் அனுபவத்தைப் பெறலாம்