உலகில் மொத்தம் 11 வகையான காலநிலைகளில் அநேக காலநிலையில் நம் இந்தியாவிலேயே இருக்கிறது. பாலைவனத்திற்கு தார் , பனிமலைக்கு இமயமலை, கிழக்கு தொடர்ச்சி மலை இலையுதிர் காடுகள், மேற்கு தொடர்ச்சி மலை பசுமை மாற காடுகள், புல்வெளிகள், மதிகெட்டான் சோலைவனம் என்று அனைத்தும் இந்திய எல்லைக்குள் அமைந்திருக்கிறது. இதில் சில வித்தியாசமான இடங்களை இங்கு பார்ப்போம்.
கடற்கரையில் அமர்ந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் பார்ப்போம். பகலில் வெயிலுக்கு இதமாக கடல் நீரில் குளித்து விளையாடுவோம். ஆனால் இரவில் வந்து கடலை பார்ப்பது அரிது. அப்படி இரவில் கடற்கரைக்கு போகும் போது கடல் அலைகள் மிளிர்ந்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். அப்படியான இரவில் ஒளிரும் கடற்கரை நம் லட்சத்தீவில் உள்ளது. பங்காரம் பீச் பகுதியில் இரவில் ஒளிரும் “பயோலுமினசென்ட் பைட்டோபிளாங்க்டன்” உள்ளது. அலைகளோடு இந்த உயிரினங்கள் கரையை தொட்டு தொட்டு செல்வது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்
பாலைவனம் என்றால் மணல் மட்டும் தான் இருக்கும் என்பதை மாற்றும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் இருக்கும். வெள்ளை உப்பு பாலைவனங்களுக்குப் பின்னால் ஆரஞ்சு நிறத்தில் சூரியன் மறைவதை பார்க்கும் போது நாம் ஏதோ வேறு உலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த இடத்தை பல படங்களின் பாடல்களில் காணலாம்.
லடாக்கின் தலைநகரான லேயிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பாங்காங் ஏரி உலகின் மிக உயர்ந்த ஏரி என்று கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4350 மீட்டர் உயரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் இந்த ஏரி நன்னீர் ஏரியாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதன் நீர் ஆவியாகி மட்டுமே வெளியேறுவதால் இது உப்புநீர் ஏரியாக விளங்குகிறது.
மேற்கு இமயமலையின் அடிவாரம் உலகின் அரிதான அல்பைன் மலர்களின் தாயகமாக வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ் உள்ளது. பனி போர்த்திய இமயமலைகளுக்கு நடுவே வெதுவெதுப்பான இந்த பள்ளத்தாக்கில் பூக்கள் பூத்து குலுங்குவதை காண உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் வந்து செல்கின்றனர். பூக்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், பூக்களை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சொர்க்கபூமி.
ஸ்ரீநகரில் 12 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இங்கு பல்வேறு நிறங்களில் உள்ள லட்சணக்கான துலிப் மலர்களை ஒரே இடத்தில பார்க்கலாம். இந்த தோட்டத்தை இந்தியாவின் நெதர்லாந்து என்று அழைக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 2730 மீ உயரத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள குல்மார்க் அதன் பனி பொழிவிற்கு பெயர் பெற்றது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு பொழியும் பனியை ரசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாழ்க்கையை இங்கே பார்க்க முடியும்.
இந்தியாவில் உள்ள மிதக்கும் தீவுகள், மிதக்கும் வனவிலங்கு சரணாலயம் என்று தேடினால் அது மணிப்பூர் லோக்ட்டாக ஏரியை கைகாட்டும். லோக்டாக் ஏரியும், செந்திரா தீவும் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அழகின் கலவையை வழங்குகின்றன. நதியின் நடுவே மிதக்கும் தீவுகளை காண செல்லும் படகு சவாரி அனுபவம் எல்லாம் வேற லெவெலில் இருக்கும்.