பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினம் அன்று காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக அருகாமையில் உள்ள கடற்கரை, பூங்கா என பார்த்து, பார்த்து சலித்துப் போன இடங்களை காட்டிலும் எதாவது புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அப்படி யோசிப்பவர்களில் உடனடியாக பலர் தேர்வு செய்வது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஸ்தலங்களை தான். இதையும் தாண்டிப் போனால், சிலர் கோவா, மூணாறு, ஆழப்புழா போன்ற வெளிமாநில சுற்றுலாவுக்கு திட்டமிடுவார்கள். ஆனால், இவையும் கூட பலர் பார்த்து ரசித்து சுற்றுலா இடங்கள் தான். எப்போதாவது சுற்றுலா கொண்டாட்டங்களுக்காக ஏதேனும் தீவுப் பகுதிக்கு செல்வது குறித்து யோசித்துள்ளீர்களா?
உங்கள் மனதில் அப்படியொரு திட்டம் இருக்குமெனில் அதை நிறைவேற்றிக் கொள்ள சரியான ஒரு வாய்ப்பை ஐஆர்சிடிசி வழங்குகிறது. வங்காள விரிகுடா கடலுக்கு நடுவே பசுமை போர்வை போர்த்தியதைப் போல இருக்கிறது இந்த தீவு. மேலே நீலமயமான ஆகாயம், சுற்றியிலும் கடல், நடுவே இயற்கையான சூழல் என்று மாபெரும் அனுபவத்தை தருவதாக இந்த தீவு அமையும்.
6 நாட்களை கொண்ட சுற்றுலா : அந்தமான் தீவுகளுக்கு 5 இரவுகள், 6 பகல் பொழுதுகளை கொண்ட சுற்றுலா திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பரதாங் தீவில் பொழுது கழிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போர்ட் பிளேயர், வடக்கு வளைகுடா தீவு, ரோஸ் தீவு, ஹாவ்லாக் மற்றும் நெயில் தீவுகள், செல்லுலார் ஜெயில், ராதா நகர் கடற்கரை, காலபதார் கடற்கரை என்று நீங்கள் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன.
எவ்வளவு கட்டணம்: தங்கும் விடுதிகளில் 3 பேர் கொண்ட அறையை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் என்றால் உங்களுக்கான கட்டணம் ரூ.57,180 ஆகும். அதுவே ஒற்றை நபர் கொண்ட அறை உங்களுக்கு வேண்டுமெனில் உங்களுக்கான கட்டணம் ரூ.73,330 ஆகும். அதுவே இருவர் பகிர்ந்து கொள்ளும் அறைகளில் தங்கினால் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.58,560 ஆகும்.
என்னென்ன வசதிகள் கிடைக்கும்? நீங்கள் செலுத்தும் கட்டணத்தில் உங்கள் பயணத்திற்கான விமானக் கட்டணம், சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்கான வாகன ஏற்பாடு, போர்ட் பிளேயரில் இருந்து ஹாவ்லாக் தீவு, நெயில் தீவு ஆகியவற்றுக்கு பயணம் செய்யவும், அங்கிருந்து போர்ட் பிளேயருக்கு திரும்பி வரவும் சொகுசுப் படகு வசதி ஆகியவை கிடைக்கும்.
இதேபோல சாதாரண படகு கட்டணங்கள், தங்குமிட கட்டணம், உணவு, பானங்கள், பயணக் காப்பீடு, நுழைவுக் கட்டணங்கள், ஜிஎஸ்டி வரி ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். காலை உணவு மற்றும் இரவு உணவு ஐஆர்சிடிசி மூலமாக வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்தில் பங்கெடுக்கும் நபர்கள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுடன் வர வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம், மண்டல அலுவலகங்கள் உள்ளிட்டவை வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.