இந்தியாவில் பல தனித்துவமான மலை பாதைகள், கடல் ஓரங்களில், ஏன் கடல் மேலே போகும் ரயில் அனுபவங்களை எல்லாம் பெரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உலகின் சிறந்த, அதே நேரம் தனித்துவமான ரயில் அனுபவத்தை நீங்கள் நினைத்தால் இலங்கை ரயில் வழி தான் சிறந்த தேர்வாக இருக்கும். அதன் சிறப்புகளை பற்றி தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
இலங்கை சிலோனாக இருந்தபோது, அங்கு தேயிலை மற்றும் காபி போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருந்த ஒரு ரயில் பாதை தான் இலங்கையின் பெரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. இன்றும் அப்படி தான் இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த ரயில் பாதைகளில் ஒன்றான கொழும்பு முதல் பதுளை வரையிலான ரயில் பாதையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்!
ஐரோப்பியர்கள் அவர்கள் விளைவித்த தேயிலை மற்றும் காபியை அவர்கள் நாட்டிற்கு கடல் வழியாக எடுத்துச்சென்றனர். மலைகளில் இருந்து கடற்கரைக்கு எடுத்து வரும் வாகனமாக ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படி 1867 இல் கொழும்பில் இருந்து கண்டி வரை இந்த ரயில் வழி அமைக்கப்பட்டது. பின்னர் இது 1874 இல் நாவலப்பிட்டி வரையிலும், 1885 இல் நானு ஓயா வரையிலும், 1894 இல் பண்டாரவளை வரையிலும், இறுதியாக 1924 இல் பதுளை வரையிலும் நீடிக்கப்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் இரயில்வே பொறியியலின் இது குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது. நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள நாடிமண் தலைநகர் கொழும்புவை மத்திய பகுதிகளுக்கு இணைக்கும் வழியாக உள்ளது. இந்த ரயில் 292 கிமீ தூரத்தை கடக்கும் போது 46 சுரங்கப் பாதைகள் மற்றும் 68 ரயில் நிலையங்களைக் கடந்து செல்கிறது.