கொரோனா சாத்தியப்படுத்திய விஷயங்களில் முதன்மையானது டிஜிட்டல் உலகம்தான். அதன் வளர்ச்சிதான் இன்று ஓரளவேனும் பொருளாதாரத்தை தக்க வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக ஒர்க் ஃபிரம் ஹோம் என்கிற கலாச்சாரமே தெரியாமல் இருந்த மக்களுக்கு இன்று அது பழகிய ஒன்றாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இது நெருக்கடியாக இருந்தாலும் தற்போது இதை பழக்கப்படுத்திக்கொண்டனர்.
எதையும் சாத்தியப்படுத்திய இந்த டெக்னாலஜி ஒரு ஊழியரை நிறுவனத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றாலும் அதன் வேலைகளையும் ஆன்லைன் மூலமே முடித்து விடுகிறது. ஆன்லைன் நேர்காணல்கள் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதிலும் நீங்கள் பழக்கப்பட்டவராக இருக்க சில அடிப்படை விஷங்களை கற்றுக்கொடுக்க முனைகிறது இந்தக் கட்டுரை. எப்படி ஆன்லைன் நேர்காணலிலும் அசத்தலாம் என்று பார்க்கலாம்.
சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள் : இண்டர்வியூ தொடங்கும் முன் இருட்டு அல்லாமல் உங்கள் முகம் தெளிவாக தெரியக் கூடிய இடமாக தேர்வு செய்யுங்கள். யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாது. எந்த ஒலியும் கேட்கக்கூடாது. அந்த கேமராவில் உங்களைத் தவிர எதுவும் தெரியக் கூடாது. அந்த அறை எதிரொலி இல்லாமல் இருக்க வேண்டும்.
இண்டர்நெட் தட்டுப்பாடு இருக்கக் கூடாது : நேர்காணலுக்கு முன் இணைய வசதி, சிக்னல் சிறப்பாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ஆடியோ, லேப்டாப் கேமரா, மைக்ரோஃபோன் நன்கு வேலை செய்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். செல்ஃபோன் சார்ஜ், லேப்டாப் சார்ஜ் நிறைவாக இருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் : ஆன்லைன் இண்டர்வியூ புதிது என்பதால் முன் கூட்டியே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் , அறிமுகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கேமராவில் நீங்களே பேசி ரெகார்ட் செய்து ஒரு முறை போட்டுப்பாருங்கள். ஆன்லைன் என்பதால் நோட்டில் குறிப்பு கூட எழுதி வைத்துக்கொண்டு அமரலாம்.
பொருமை அவசியம் : ஆன்லைன் என்பதால் சில நேரங்களில் நாம் பேசுவதோ அல்லது அவர்கள் பேசுவது சிறிது நேரம் கழித்து கேட்கலாம் எனவே பதில் அளிக்கவோ , அவர்கள் பேசுவதை கவனிப்பதிலோ பொருமை அவசியம். அவர்கள் முழுமையாக பேசி முடித்த பின்பு , நன்கு கேட்டுவிட்டு உங்கள் பதிலை தர தயாராகுங்கள். முன்கூட்டியே வாய் திறக்க வேண்டாம். முடிக்கும்போதும் சிரித்த முகத்துடன் நிறைவு செய்யுங்கள்.