நீங்கள் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்றால் அவை நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை குறைக்க சில எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் நாய் விரைவாக குணமடைய உதவுவதற்கான முதல் படி அதற்கு ஒரு சிக்கல் நேரிட்டால் அதனை எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கண்டறிவது.
எனவே உங்கள் செல்லப்பிராணி நோய்வாய்ப்பட்டிருப்பது தெரிந்தால் அதனை விரைவில் கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்வது முக்கியம். ஒருவேளை உங்கள் நாயின் நிலை மோசமடைந்தால், மருந்து மற்றும் பொருத்தமான திரவ உணவுகளை கொடுப்பது போன்ற கூடுதல் கவனிப்பை நீங்கள் வழங்க வேண்டியது அவசியம். எனினும் கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டிய தேவை எழுவதற்கு முன்பு, உங்கள் நாய் நிலை மோசமாவதை தடுக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள் இங்கே... உங்கள் செல்லப்பிராணிக்கு மருத்துவ கவனிப்பு தேவையா என்பதை கண்டறிய உதவும் அறிகுறிகள்..
அதிக தாகம் : இயல்பாக இருக்கும் போது உங்கள் நாய் தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது முக்கியம். நிபுணர்களின் கூற்றுப்படி வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்கும் நாய்க்கு நீரிழிவு அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் நாயின் தண்ணீர் கிண்ணத்தில் இயல்பை விட அதிகமாக தண்ணீர் நிரப்ப வேண்டியிருந்தால் அல்லது அடிக்கடி வெளியே சென்று அதிக அளவு சிறுநீர் அல்லது மலம் கழித்தால் அதனை கவனிக்க தவற கூடாது.
பலவீனம் : எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நாய்கள் திடீரென அடிக்கடி மந்தமாக இருப்பது பலவீனமாக இருப்பது நோயின் அறிகுறிகளாகும். நாய்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்ற நோய்த்தொற்று முதல் வலி அல்லது மருந்து எதிர்வினை வரை ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். இவை தவிர நீரிழிவு, இதயம் மற்றும் கல்லீரல் நோய், பார்வோவைரஸ், டிஸ்டெம்பர், கெனல் காஃப் மற்றும் ஹார்ட்வோர்ம் உள்ளிட்டவை மிகவும் பொதுவான காரணங்களில் சில. ஒலிகள், அசைவுகள் மற்றும் தொடுதல் உள்ளிட்டவற்றுக்கு வழக்கத்தை விட ரியாக்ஷன் மெதுவாக இருந்தால் அல்லது விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஆர்வமின்மையை வெளிப்படுத்தினால் கவனிக்க வேண்டும்.
மலம் மற்றும் வாந்தியில் ரத்தம் : உங்கள் செல்லப்பிராணியின் மலம் அல்லது வாந்தியில் ரத்தம் வந்தால் அது ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சியை குறிக்கிறது. உடனடியாக உங்கள் செல்ல பிராணிக்கு கால்நடை மருத்துரின் கவனிப்பும், சிகிச்சையும் அவசியம். வயிற்று புண்கள், வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், ரத்தக்கசிவு இரைப்பை குடல் அழற்சி, ஒட்டுண்ணிகள் உள்ளிட்டவை ரத்தத்துடன் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் ஆகும்.
பசியின்மை : உங்கள் செல்லப்பிராணிகள் வழக்கமாக குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே விரும்பி உண்பவர்களா அல்லது எதை கொடுத்தாலும் சாப்பிடுபவர்களா என்பதை பொருட்படுத்தாமல் அவை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாத போது கண்டிப்பாக கவனம் செலுத்துங்கள். உங்கள் செல்லப்பிராணி சுத்தமாக சாப்பிடவில்லை என்றால் அதற்கு மன அழுத்தம், காய்ச்சல் அல்லது வலி உள்ளிட்டவற்றின் அறிகுறியாக இருக்கலாம். ஒருநாளைக்கு மேல் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடனடியாக உங்கள் நாயை உரிய கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
கண்கள் சிவத்தல் : உங்கள் நாயின் கண்கள் சிவப்பாக இருப்பது அல்லது சுருங்குவது, நாயின் கண்களில் இருந்து அதிகப்படியான நீர் அல்லது அழுக்கு வெளியேறுவது உள்ளிட்ட அறிகுறிகள் கண்களில் காயம் அல்லது தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். உங்கள் செல்லப்பிராணிகளின் கண்களில் லேசான மாற்றம் தெரிந்தால் கூட விரைந்து கால்நடை மருத்துவரிடம் கூட்டி செல்ல வேண்டும். இல்லை என்றால் கண்பார்வை திறனை உங்கள் நாய் இழக்க நேரிடும். நாய்களுக்கு ஏற்படும் கண் சிக்கல்களை சரிசெய்ய மற்றும் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் கொடுக்கப்படலாம்.