“தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி”, பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே.” என்பது போன்ற சினிமா பாடல்களை இப்போதும் கேட்டால் கூட, நம்மை அறியாமல் இனம் புரியாத சந்தோசம் நம்மை வருடிச்செல்லும். ஆம் நட்பிற்கு இத்தனை மகிமை உள்ளது. என்ன தான் அடித்துக் கொண்டு சண்டைப் போட்டாலும் ஒரு நாள் பேசமால் இருந்தால் கூட எப்போது நீ பேசுவாய்? என சமாதானம் செய்து கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்..
இத்தகைய உறவுகள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா? என்பது கேள்விக்குறி தான். காலம் செல்ல செல்ல தொழில், பணி இடமாற்றம், இளமைப்பருவம், குடும்பம் போன்ற பல்வேறு காரணங்களால் நம்முடைய குழந்தைப் பருவ நண்பர்களிடமிருந்து விலகிச்செல்கிறோம். இருந்தப்போதும் அவர்களை நினைக்காத நாளே இருக்காது. சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் கண் முன்னே வந்து செல்வார்கள். இப்படி புனிதமான உங்களது நட்பை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் நட்புடன் தொடரவேண்டுமா? இதோ எப்படி என்பது? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
சரியான வழியைத் தேர்வு செய்யவும் : இன்றைக்கு சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டா போன்றவற்றின் மூலம் உங்களது நண்பர்களைத் தேடுங்கள். நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம். முதலில் ஒரு மெசேஜ் அனுப்புங்கள். ஏனென்றால் அவர்களின் குடும்ப சூழல் எப்படி இருக்கிறது? என்பது தெரியாது. உங்களது மெசேஜ்க்குப் பதில் அளிக்கிறார்கள் என்றால் மீண்டும் நட்பை புதுப்பிக்கத் தொடங்குங்கள். ஒருவேளை நீங்கள் சண்டையிட்டுப் பிரிந்திருந்தால் உங்களுடன் பேசுவதற்கு சில நாள்கள் எடுக்கும். பேசினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மரியாதைக் கொடுங்கள்.
குறுகிய கால சந்திப்பு : நீங்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு உங்களுக்குப் பதில் அளிக்கும் பட்சத்தில், நேரம் இருந்தால் நேரில் சந்திக்கவும். நிச்சயமாக முதல் சந்திப்பில் என்ன பேசுவது? என்பதே தெரியாது. ஆரம்பத்தில் இருப்பது போன்று ஜாலியாகப் பேசுவார்கள் என நினைக்க வேண்டாம். சில மணி நேர சந்திப்பு உங்களை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும். இந்த நேரத்தில் உங்களது பழைய புகைப்படங்களை ஒன்றாக அமர்ந்துப் பார்க்கவும் அல்லது குழந்தைகளாக நீங்கள் சென்ற அந்த இடத்திற்கு மீண்டும் சென்று பார்க்கலாம். இந்த நிகழ்வுகள் உங்களை மன நிம்மதியாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
ஆனாலும் உங்களுடைய பழைய நட்புகளுடன் நீங்கள் எந்த எதிர்ப்பார்ப்பையும் வைக்கக்கூடாது. வேலை, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளால் அவர்களின் மனநிலை மாறியிருக்கக்கூடும். எனவே பெரும்பாலானோர்கள் அவர்களின் கடந்த காலத்தைப் போல், தங்களின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமற்றது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டால், ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் எதிர்பார்த்தது இதுதான் என்று நீங்களே சொல்லிக் கொள்வதுதான்.