

செல்ஃபோன் பயன்பாடு குடும்பத்துடனான தொடர்பையே துண்டித்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளும் நேரமே மிகக் குறைவு. இதை நீங்களும் உணர்கிறீர்கள் எனில் இன்றே அதைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்பது நல்லது. அதற்கு என்னென்ன வழிகள் என்று பார்க்கலாம்.


குளிக்கும்போதும் , தூங்கும்போதும் செல்ஃபோனை அருகில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை தவிருங்கள். சார்ஜர் போடுவதாக இருந்தாலும் பெட்ரூம் அல்லாமல் வெளியே போடுங்கள். அந்த சமயம் குடும்பத்தோடு நேரம் ஒதுக்குங்கள்.


கேட்ஜெட் ஃபிரீ டைம் என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கத் திட்டமிடுங்கள். அந்த நேரத்தில் அனைவரும் செல்ஃபோன் , கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதை தீவிரமாக கடைபிடியுங்கள்.


முடிந்தவரை அலுவலக வேலைகளை வீட்டில் உள்ளோர் அங்கேயே முடித்துவிட்டு வர வேண்டும் என்பதை பின்பற்றுங்கள். வீட்டில் அது தொடர்பாக செல்ஃபோன், லாப்டாப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.


வீட்டில் குடும்பத்துடன் பேசுகிறீர்கள், விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் எனில் செல்ஃபோனை சைலண்ட் மோட் அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்வது நல்லது. அப்போதுதான் அவருடன் முழு கவனத்தோடு உரையாட முடியும். குழந்தைகளோடு விளையாடும்போதும் செல்ஃபோனைத் தவிருங்கள்.


வீட்டில் செல்ஃபோன் பயன்படுத்துகிறீர்கள் எனில் அதிக நேரம் பயன்படுத்தினால் அலாரம் அடிக்கும் வகையிலான ஆப்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்.