காதல் உறவுகள் என்றென்றும் இனிப்பானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. காதலில் சில எதிர்பார்ப்புகளை நாம் கொண்டிருப்போம். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் எவ்வளவு பலமான பந்தம் என்றாலும் அதில் பிரிவு ஏற்பட்டு விடுகிறது.அதே சமயம், நாம் எதார்த்த சூழலுக்கு மீறிய எதிர்பார்ப்புகளை கொண்டிருப்போமேயானால், எவ்வளவு தான் கிடைத்தாலும் நமக்கு திருப்தியே ஏற்படாது. இருப்பினும் எதிர்பார்ப்புகள் அளவோடு இருக்குமானால் அவை நம் உறவை பலப்படுத்துவதாக அமையும்.இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகரிக்கும். மேலும் சவால்களை இணைந்து முறியடிப்பதற்கான ஊக்கமாக அது அமையும்.
இதுகுறித்து, மணநல நிபுணர் சாந்தணி துக்நாயத் கூறுகையில், “இயல்புக்கு மாறான எதிர்பார்ப்புகளால் எழுகின்ற பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். எதிர்பார்ப்புகள் என்பது தங்கள் உறவுக்கு ஏற்ப இயல்பான அளவில் இருப்பதை தம்பதியர்கள் உறுதி செய்ய வேண்டும்.கொஞ்சம் முயற்சியும், பொறுமையும் இருந்தால் தம்பதியர்கள் அனைத்து விதமான குதூகலத்தையும், வெற்றியையும் அனுபவிக்கலாம். காதல் உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவும்’’ என்று தெரிவித்தார்.
எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது : அனைத்து தருணங்களிலும் நம் வாழ்க்கை துணை நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான எண்ண ஓட்டம் ஆகும். இது சாத்தியமில்லாத ஒன்று. ஆக, இந்த எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆக, உங்களுக்கு உள்ளேயே மகிழ்ச்சியை தேடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
உங்களை கோபம் அடைய வைக்கக் கூடாது என நினைப்பது : எந்தவொரு நபரும் முழுமையானவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோரிடத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை நீங்கள் அனுசரித்துச் செல்வதை விடுத்து, உங்களை கோபப்படுத்தும் நோக்கில் அவர்கள் அப்படி நடந்து கொள்வதாக நினைத்துக் கொள்வது தவறாகும்.
எப்போதும் உடனிருக்க வேண்டும் என்று நினைப்பது : இதுதான் இருப்பதிலேயே மோசமான எதிர்பார்ப்பு ஆகும். எந்த நேரமும் நம்முடைய பார்ட்னர் நம்முடனே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிக தவறாகும். வேலைப்பளு காரணமாக இரவில் தாமதமாக வரலாம் அல்லது அவசரம் கருதி அதிகாலையிலேயே கிளம்பிச் செல்லலாம். உங்களுடன் இருக்கும் சில மணி நேரங்கள் நல்லுறவை கொண்டதாக இருக்கிறதா என்று ஆராய்ந்தால் போதுமானது. உடனில்லாத நேரம் குறித்து கவலை கொள்ள வேண்டாம்.