இன்றைய காலத்து பெற்றோர்கள் அனைவருமே தங்களது குழந்தைகளின் படிப்பை பற்றி அதிக கவலை கொண்டுள்ளார்கள். மேலும் இதற்காகவே தனியாக டியூஷன் அனுப்புவது, விதவிதமான கோச்சிங் சென்டர்களுக்கு அனுப்புவது போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மிக எளிதாக உங்கள் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைக்க முடியும்.
திட்டமிடுதல் : முதலில் அவர்கள் படிப்பதற்கான நேர அட்டவணையை தயார் செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து பாடத்தையும் ஒரே நேரத்தில் படிக்காமல், அவற்றை பகுதி பகுதியாக பிரித்து படிக்க வைக்க முடியும். இதனால் குழந்தைகளும் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் நேர அட்டவணையை தயாரிக்க நீங்களும் உதவி செய்யலாம்.
படிப்பதற்கு ஏற்ற சூழலை உண்டாக்க வேண்டும் : பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ப சூழலை உண்டாக்க வேண்டும். கட்டிலில் படுத்துக்கொண்டோ அல்லது சொகுசாக எங்கேயும் சாய்ந்து கொண்டோ படிப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் படிக்கும் போது தூங்கி விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் படிப்பதற்கு என்று தனி அறையோ அல்லது அவர்களின் தங்கும் அறையிலேயே படிப்பதற்கான ஒரு தனி மேசை, இருக்கை, மின்விளக்குகள், எழுது பொருட்கள் ஆகியவற்றை தயார் செய்து வைப்பது நல்லது.
எழுது பொருட்களுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் : அவர்களின் பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை வைப்பதற்கு தனியாக ஒரு இடத்தை தயார் செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மிக எளிதாக தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள் ஆகியவற்றை உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரவு நேரங்களில் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும் : உங்கள் பிள்ளைகள் இரவு நேரங்களில் கண் விழித்து படிப்பவராக இருந்தால் அதனை நீங்கள் தடுக்க வேண்டும். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். அதற்கு பதிலாக இரவு சீக்கிரமாக உறங்க சென்று அதிகாலையில் எழுந்து படிக்கலாம். மேலும் படிக்கும் நேரத்தில் அவ்வப்போது சில இடைவேளைகள் எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியோடு மீண்டும் படிக்கத் துவங்கலாம். அதே நேரத்தில் படிப்பதற்காக தங்கள் உடல் நிலையை வருத்திக்கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் நிலை அல்லது மனநிலை சரியில்லை என்றால் அப்போதைக்கு நிறுத்திவிட்டு பிறகு தொடரலாம்.
அவர்கள் கவனத்தை சிதறடிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் :
பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது கவனத்தை சிதறடிக்கும் வேலையை பெற்றோர்கள் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தமாக டிவி பார்ப்பது, சத்தமாக பேசுவது, சண்டை போடுவது போன்ற விஷயங்களை தவிர்த்தல் நல்லது.
கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் : புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். வெறும் புத்தக புழுவாக மட்டுமல்லாமல் வெளி உலகை கவனிக்கவும், அதன் நெளிவு சுழிவுகளை பற்றியும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். மேலும் படிக்கும் நேரங்களை முழுமையாக படிப்புக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும்.