கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுவதில் உற்சாகமாக உள்ளனர். தீப ஒளி என்று அழைக்கப்படும் இந்த திருவிழா, நம்பிக்கை, விளக்கு, அன்பு, புதுமை, மாற்றம், மற்றும் பரிசு என பலவற்றை நமக்கு அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் விளக்குகள், இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.
மேலும் அன்பானவர்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். புதிய ஆடைகள், விலையுயர்ந்த அலங்காரங்கள், பரிசுகள், பட்டாசுகள் என அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆண்டு நாம் நம் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பு வழிமுறைகளுடன் பண்டிகையை கொண்டாட முடிவு செய்யலாம்.
எண்ணெய் விளக்குகள் மற்றும் LED விளக்குகள் : உங்கள் வீட்டை ஒளிரச் செய்ய அகல் விளக்குகள் அல்லது
LED விளக்குகளை பயன்படுத்துங்கள். விளக்குகளை வடிவமைக்க உங்கள் குழந்தைகளின் படைப்பாற்றலைப் பயன்படுத்தச் சொல்லுங்கள், இது உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வேடிக்கையாகவும், ஈடுபாடாகவும் இருக்கும். பண்டிகைக்கு நீங்கள் எண்ணெய்யில் ஏற்றும் தீபத்தை வைப்பது பயனளிக்கும். மேலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய LED விளக்குகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். மற்ற விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதால் மாசுபாடு குறைவாக உள்ளன.
ஆர்கானிக் பரிசுகள் : தீபாவளியன்று, உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆர்கானிக் பரிசுகளை வழங்குங்கள். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் உள்ளூர் சந்தையை ஊக்குவிக்க முடியும். கையால் தயாரிக்கப்பட்ட சோப்புகள், கிரீம்கள், ஆர்கானிக் டீ கப்புகள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குக்கீகள் மற்றும் உள்ளூர் மக்களால் தயாரிக்கப்படும் பிற பொருட்கள் என பலவும் ஒரு நல்ல பரிசுக்கான யோசனைகள் ஆகும். இன்-டோர் தாவரங்கள் மற்றும் பூக்களும் ஒரு நல்ல யோசனை. மூங்கில் கூடை, காகிதத்தால் செய்யப்பட்ட பைகள் அல்லது துணி பைகளைப் பயன்படுத்தி அவற்றை மேலும் மெருகேற்றலாம்.
சுற்றபுற சூழல் நட்பு அலங்காரங்கள் : இயற்கையான பூக்கள், தாவரங்கள், களிமண் பொருட்கள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றால் உங்கள் வீட்டை அலங்கரிக்கவும். வண்ணமயமான சுவரொட்டிகள் மற்றும் திரைச்சீலைகளை உருவாக்க உங்கள் வீட்டில் உள்ள பழைய புடவைகள் மற்றும் துப்பட்டாக்களை மறுசுழற்சி செய்யலாம். நேர்த்தியான விளக்குகள் மற்றும் பிற வடிவமைப்புகளை உருவாக்க வர்ணம் பூசப்பட்ட செய்தித்தாள்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டை அலங்கரிக்க இயற்கை பொருட்களைத் தேர்வுசெய்வது அவசியம்.