பார்கின்சன் நோய் என்னும் நடுக்குவாத நோய் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இதுவும் உலகில் பலரை பாதிக்கக் கூடிய நோயாகவும், பரவலாக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. நம் உடல் இயக்கத்தை மையப்படுத்திய நரம்பு மண்டல கட்டமைப்பின் மீது ஏற்படுகின்ற பாதிப்பை தான் பார்கின்சன் நோய் என்று குறிப்பிடுகின்றனர்.
World Parkinson's Disease Day 2023 : கடந்த 2015ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 6.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் 1.17 லட்சம் பேர் இதே நோயால் உயிரிழந்தனர். இந்த நிலையில் பார்கின்சன் நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஏப்ரல் 11ஆம் தேதியன்று உலக பார்கின்சன் நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பார்கின்சன் நோய் காரணமாக சமூகத்தில் பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளைவுகளை குறைத்திடும் வகையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிட உறுதி ஏற்கப்படுகிறது.
பார்கின்சன் நோய் - முக்கியத்துவம் : உலக அளவில் நரம்பு மண்டலத்தை மையப்படுத்தி ஏற்படக் கூடிய நோய்களில் இரண்டாம் இடத்தில் பார்கின்சன் நோய் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரையில் இந்த நோய் குறித்து பெரிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற நிலையில் ஒரு அலட்சியமான சூழல் நிலவுகிறது. தோராயமாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரணமாக பொதுமக்கள் பலருக்கு இந்த நோய் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை என்ற நிலையில், பலரும் அதன் விளைவுகளை என்னவென்றே தெரியாமல் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பலவீனத்தை எதிர்கொண்டு அற்புதமான பணிகளை செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதை பார்கின்சன் நோய் தினம் நோக்கமாக கொண்டிருக்கிறது.
வரலாறு : கடந்த 1,755 - 1,824 காலகட்டத்தில் வாழ்ந்த ஜேம்ஸ் பார்கின்சன் என்ற மருத்துவர் தான் இந்த நோயை முதன் முதலில் கண்டறிந்தார். அதுகுறித்து 1817ஆம் ஆண்டில் விரிவான ஆய்வுக் கட்டுரையையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், 1997ஆம் ஆண்டில் முதன் முதலில் உலக பார்கின்சன் தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
நோய் குறித்த தகவல் : பார்கின்சன் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியாது. தெரஃபி சிகிச்சையின் மூலமாக இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். உடனடியாக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பார்கின்சன் நோய் தீவிரமானது அல்ல. ஆனால், ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எத்தகையது என்பதைப் பொருத்து அவர்களின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.