

ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 11-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் சிறுநீரக தினம்( World Kidney Day 2021) அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "சிறுநீரக நோய் இருப்பினும் நன்றாக வாழ்வது” என்ற கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.


நம் உடலில் மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வது எவ்வாறு என்றும் ஆண்டுதோறும் இந்நாளில் சிறுநீரக நிபுணர்களால் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும். பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள், ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலைகளை செய்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 400 முறைக்கும் மேல் இந்த வேலையை சிறுநீரகங்கள் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் அதிக ரத்த அழுத்தம், நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.


உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்று சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டு வரும் அதேவேளையில் நாடு முழுவதும் பனிக்காலம் விலகி கடும் கோடைகாலம் துவங்கி உள்ளது. கோடைகாலம் என்பது குறிப்பாக சில முன்னெச்சரிக்கைகளை நாம் பின்பற்றப்படாவிட்டால் உடலுக்கு கடினமான ஒரு காலமாக இருக்கும். டிஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சி ஏற்படும். உடலுக்குத் தேவையான நீர் சத்து இல்லாமல் போகும் போது ஏற்படக்கூடியதே இந்த `டிஹைட்ரேஷன்'.


இருப்பினும் டிஹைட்ரேஷன் என்பது குடிநீரைப் பற்றியது மட்டுமல்ல, சிறுநீரகங்களின் சரியான செயல்பாடும், உடலின் ஹோமியோஸ்ட்டிக் சமநிலையை பராமரிப்பது உள்ளிட்டவையும் தான். சிறுநீரகங்களை முறையாக பராமரிப்பது எவ்வாறு என்று பார்க்கலாம்.


நீர் சத்து: சிறுநீரகங்கள் முறையாக செயல்பட உடலில் போதுமான அளவு நீர்சத்து இருப்பது அவசியம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நம் உடலில் இருந்த அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் நமது உடலில் நீர் சத்தை தக்க வைத்து கொள்ள நாளொன்றுக்கு குறைந்தது 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தவிர தேவையான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய நீர் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.


டிஹைட்ரேஷன் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சம்பந்தப்பட்ட மருத்துவரின் ஆலோசனையின் காலத்திற்கு ஏற்றவாறு உணவு முறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் உப்பு சிறுநீரக செயல்பாட்டை பாதித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. சாசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 10 கிராம் உப்பு எடுத்துக்கொள்கிறோம். இந்த அளவு 4 முதல் 5 கிராம் வரை குறைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கமும் சிறுநீரகத்தை பாதிக்கும். சீரான உடல் எடையை பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூட்டு, முதுகு மற்றும் உடல் வலிக்கு அடிக்கடி எடுத்து கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும் தன்மை உடையவை. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி சுயமருத்துவம் என்ற பேரில் வலிநிவாரணிகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.