இன்றைய இயந்திர உலகில் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாத நபர்களே இருக்க முடியாது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டும் தான் மன அழுத்தம் இருக்கும் என்று சொல்ல முடியாது. வீட்டு வேலை செய்பவர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள் என பல தரப்பினருக்கும் வெவ்வேறு ரூபங்களில் மன அழுத்தம் குடி கொண்டிருக்கும்.
பதற்றம், கவலைக்குரிய சிந்தனைகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியிலான மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படியாகக் கொண்டதாக கவலை இருக்கிறது. கவலை தோய்ந்த மனதுடன் இருப்பவர்கள் எதிலும் போதிய ஆர்வம் செலுத்தாமல், எப்போதும் சோர்வுடனே காணப்படுவார்கள். அதிகப்படியான வியர்வை, தடுமாற்றம், சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவை கவலையின் அறிகுறிகள் ஆகும்.
சுறுசுறுப்பாக இருப்பது : மனதுக்கு கவலை அளிக்கின்ற விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் கவலை அதிகமாகுமே தவிர குறையாது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அதைப் போல கவலைகளை மறந்து சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மாற்று நடவடிக்கைகளில் நம் கவனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாக இயங்கினால் கவலைகள் பறந்து ஓடும்.
ஆரோக்கியமான உணவு : ரத்த சர்க்கரை குறைவு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிய உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் மன மாற்றங்களாலும் நம் மனதில் கவலைகள் நிரம்பும். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.