உடல் இயக்கத்திற்கு, சரும பாதுகாப்பிற்கு என பல விஷயங்களுக்கு கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அத்தியாவசியமான சத்துப் பொருள் ஆகும். எனினும், இது உடலில் மிகுதியாக இருக்கும் போது பல்வேறு உடல்நல பிரச்சினைகளைக் கொண்டு வருவதோடு, இறுதியாக உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும். குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்புகள் இருந்த வரலாறு, நீரிழிவு பாதிப்பு, புகைப்பிடித்தல், உடல் பருமன் போன்றவை இருந்தால் அவ்வபோது கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து, மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் அபாயங்கள் : உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த நாளங்களில் அது படியத் தொடங்கும். சில சமயம், இந்த படிமங்கள் உடைந்து, கட்டியாக மாறிவிடும். அந்த சமயத்தில் தான் ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அபாய அளவுக்கு கீழாக கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது மிக, மிக கட்டாயமாகும்.
கால் மற்றும் பாதங்களில் உணர்வின்மை : ரத்தப் பரிசோதனை மூலமாகத் தான் கொலஸ்ட்ரால் அளவை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட, நம் உடலின் சில அறிகுறிகளும் அதை உணர்த்துகின்றன. குறிப்பாக, கால் மற்றும் பாதங்களில் உணர்வின்மை பிரச்சினை ஏற்படும்போது இதை புரிந்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் சென்று சேருவதில் ஏற்படும் தடைகள் காரணமாக இந்த நிலை ஏற்படும். கால்களின் புண் ஆறாது. கால் அல்லது பாதம் குளுமையாக இருக்கும்.
ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் : இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது ஹார்ட் அட்டாக் பிரச்சனையும், மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டிரோக் பிரச்சனையும் ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த பாதிப்புகள் ஏற்படும் வரையிலும் பலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பது குறித்து தெரிவதில்லை.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்? பொதுவாக 9 முதல் 11 வயதுக்குள்ளாக முதலாவது கொலஸ்ட்ரால் பரிசோதனையை செய்துவிட வேண்டும் என்று அமெரிக்க தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்தப் பரிசோதனை மையம் தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதுவே 45 முதல் 65 வயதுடைய ஆண்களுக்கும், 55 முதல் 65 வயதுடைய பெண்களுக்கு கொலஸ்ட்ரால் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்வது கட்டாயம். 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.