தன் செல்லக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலம் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது. தாய்க்கும், சேய்க்கும் இடையிலான உறவை, பந்தத்தை இது அதிகரிக்கிறது. அதேசமயம் பாலூட்டும் காலத்திலும் தாய்மார்கள் சில சவால்களை, சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவற்றுக்கு தீர்வு தரும் விஷயங்கள் இந்த செய்தியில் இருக்கின்றன.
விழிப்புணர்வு அவசியம் : தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கிடைக்கின்ற பலன்கள் போன்றவை குறித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் தாய்ப்பால் மூலமாகவே சென்று சேருகிறது என்பதை உணர்ந்து கொண்டு, குழந்தைக்கும் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவரின் உதவியை நாடலாம் : தாயாப்பால் ஊட்டுவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால், அதுகுறித்து நீங்கள் மருத்துவர் அல்லது செவிலியர்கள் போன்றோரின் உதவியை நாடலாம். பாலூட்டுதல் தொடர்பான நிபுணர் அல்லது தாய்ப்பால் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். அனுபவம் வாய்ந்த தாய்மார்களின் ஆலோசனையும் கூட பயனுள்ளதாக அமையும்.
சுய அக்கறை கொள்ளுதல் : புதிய தாய்மார்கள் தன்னைப் பற்றியும், தன் குழந்தை குறித்தும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். மது, சிகரெட் மற்றும் காஃபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் சுரப்பை தூண்டக் கூடிய முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மிகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூண்டு, பாலக்கீரை சாப்பிடுவது பால் உற்பத்தியை பெருக்கும்.
குழந்தை உடனான உறவை மேம்படுத்துதல் : பாலூட்டும் காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான பந்தம் பலமானதாக இருக்கும். இந்த சமயத்தில் எந்தவித தொந்தரவுகளும் இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு டிவி, வீடியோ கேம்ஸ், ஃபோன் பேசுவது போன்ற இடர்பாடுகளை தவிர்க்க வேண்டும். குழந்தையின் எண்ண வெளிப்பாடுகளை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.
கணவரும் பங்கெடுக்கலாம் : நேரடியாக தாய்ப்பால் ஊட்டும் கடமை தாய்மார்களுக்குத்தான் உண்டு என்றாலும், இந்த விஷயத்தில் கணவன் அவர்களுக்கு உதவியாக இருக்கலாம். குழந்தைக்கு மனைவி பாலூட்டும் சமயத்தில் குழந்தையின் எண்ண ஓட்டங்களை கவனிப்பது, தாய்ப்பால் ஊட்டிய பிறகு குழந்தைக்கு தட்டிக் கொடுப்பது, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை மனைவிக்கு தயார் செய்து கொடுப்பது போன்ற கடமைகளை செய்யலாம்.