இந்த ஆண்டு மார்கழி மாத குளிர் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான். வெப்பநிலை எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கிறது. பொதுமக்கள் பலருக்கு ஏற்கனவே ஜலதோஷம், சுவாசப் பிரச்சினைகள், இருமல், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தசைவலி போன்ற பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
மிகுதியாக தண்ணீர் அருந்துவது அவசியம் : குளிர் காலத்தில் ஏற்கனவே நடுக்கமாக இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் பலர் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கின்றனர். ஆனால் குளிர் காலத்திலும் உடலுக்கு நீர்ச்சத்து அவசியமானதாகும். தினசரி 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரையில் தண்ணீர் அருந்த வேண்டும். எப்போதும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும் என்பதில்லை. க்ரீன் டீ, மூலிகை டீ, லெமன் டீ, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தலாம்.
காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளுதல் : காய்கறி மற்றும் பழங்கள் எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். அதிலும் குளிர் காலத்தில் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இவை உதவிகரமாக இருக்கின்றன. மேலும் மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன. பழங்களும், காய்கறிகளும் போதுமான அளவில் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படும். விட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து கிடைக்க இவற்றை தேவையான அளவு உட்கொள்ள வேண்டும்.
நீராவி பிடிப்பது : நாம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் மருத்துவ சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் குளிர் காலத்தில் நொச்சி இலை, துளசி போன்றவற்றை சுடுநீரில் போட்டு ஆவிபிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மூலிகைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ள தலைவலி அல்லது ஜலதோஷ தைலத்தை பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம். நீராவி பிடிப்பதால் தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் பாதிப்படைந்துள்ள திசுக்கள் மேன்மை அடையும்.
வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது : குளிர் காலத்தில் உடல் முழுவதையும் கவர் செய்கின்ற, இறுக்கமான ஆடைகளை அணிந்தால் மட்டுமே நடுக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். உதாரணத்திற்கு மேலே ஸ்வட்டரும், கீழே ஜூன்ஸும் அணிந்து கொள்ளலாம். நடுங்க வைக்கும் குளிரை இவை தடுப்பதோடு ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல் உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.