மக்களில் பலர் எண்ணற்ற காரணங்களால் தூக்கமிழந்து தவிக்கின்றனர். மனதில் இருக்கும் அதிகப்படியான கவலைகள் அல்லது தூக்கமின்மை பிரச்சனைகள் அல்லது இதர நோய்களின் எதிரொலியாக தூக்கம் கெட்டு விடுகிறது. சிலருக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. இன்னும் சிலர் பாதியில் முழிப்பு வந்து அவதி அடைபவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில், ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்பதற்காக பலரும் தூக்க மாத்திரைகளை வாடிக்கையாக எடுத்துக் கொள்கின்றனர்.
மனதின் கவலைகளை போக்குகிறது : பொதுவாக தூக்க மாத்திரைகள் தூக்கத்திற்கான மருந்தாக மட்டும் வேலை செய்வதில்லை. அது மனதில் உள்ள அழுத்தம் மற்றும் கவலைகளை குறைப்பதாக அமைகிறது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முழுமையான தூக்கம் கிடைக்க இந்த மாத்திரைகள் உதவிகரமாக இருக்கின்றன என்ற போதிலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் ஏராளம். குறிப்பாக, தூக்க மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளவே கூடாது. அது மிக, மிக தவறு. அளவுக்கு மீறி தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். அதே சமயம், மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் கூட, அதன் பக்க விளைவுகளை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.