இன்று பலருக்கும் சர்க்கரை நோய் என்பது பொதுவாக வரக்கூடிய ஒரு நோயாக உருவாகி உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறியவில்லை என்றால், பல்வேறு விதமான பாதிப்புகள் நமக்கு வரக்கூடும். குறிப்பாக இதயம், கண், சிறுநீரகம் மற்றும் இன்னும் பல உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். எனவே, சர்க்கரை இருந்தால் சர்க்கரை அளவை சரிவர கண்காணித்து வர வேண்டும். ஏனென்றால், பல்வேறு காரணிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை மாற்றலாம், சில நேரங்களில் கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடுவும் வாய்ப்புள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள காரணிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு : ஒரு நல்ல உணவு உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவ வேண்டும். இது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் வேண்டும் அல்லது அதிக எடையை குறைக்க உதவ வேண்டும். பொதுவாக நீங்கள் அதிக எடையுடன் இருக்கும்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினம். நீங்கள் சாப்பிடும் உணவுகள் அனைத்தையும் கைவிட வேண்டிய அவசியமில்லாத ஒரு உத்தியை உருவாக்க, உங்கள் மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், மெலிந்த இறைச்சிகள் அல்லது பிற ஆரோக்கியமான புரதங்கள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் அடங்கிய உணவு மற்றும் தின்பண்டங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள் : வழக்கமான உடற்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது தினசரி நடைப்பயிற்சி செய்வது கூட சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் தசைகள் சர்க்கரையை (குளுக்கோஸ்) ஆற்றலாகப் பயன்படுத்துகின்றன. நீங்கள் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் இன்சுலினை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறது. இதன்மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் : உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்வது மிக முக்கியமானது. ஒருவேளை, மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டாலோ அல்லது அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று உங்களுக்கு புரியவில்லை என்றாலோ உங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக தெரிவிக்கவும். இது பற்றி பேச ஒருபோதும் தயங்க வேண்டாம்.
புகைப்பிடிப்பது : சர்க்கரை நோய் என்பது நரம்பு பாதிப்பு, இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய், இரத்த நாள நோய், பக்கவாதம் மற்றும் கால் பிரச்சினைகள் போன்ற நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நீங்கள் புகைபிடித்தால் இந்த சிக்கல்களை வளர்ப்பதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகும். புகைபிடிக்கும் பழக்கம் உடற்பயிற்சி செய்வதை மேலும் கடினமாக்கும். எனவே, இதை கைவிடுவது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது முக்கியம்.