தண்ணீர் அருந்தும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என பிளாஸ்டிக் குடங்களை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான முறையில் தண்ணீர் அருந்த முணைகின்றனர். இது நல்ல விஷயம்தான் என்றாலும் மருத்துவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து வெந்நீராக குடிப்பது நல்லது என்கின்றனர். அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் பெற முடியும். அவை என்னென்ன பார்க்கலாம்.
முதல் விஷயம் நாம் குடிக்கும் நீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்துவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் அதிகமாக சுடு தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர். இந்த பழக்கத்தை எல்லா நேரங்களிலும் செய்வது இன்னும் நல்லது. இதனால் நீர் வழியாக பரவும் எந்த கிருமிகளும் நம்மை தாக்காது. எனவே குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீட்டில் இதை கடைபிடிப்பது நல்லது.
சுடு தண்ணீர் உடல் எடையை குறைப்பவர்களும் முயற்சிக்கலாம். ஏனெனில் இது செரிமானத்தை தூண்டுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கியில்லாமல் விரைவாக உணவுக் கலோரிகளை கரைத்துவிடும். அதேபோல் காலையில் எழுந்ததுமே சூடான தண்ணீர் குடிப்பதும் உங்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும். அதன் பின் உடற்பயிற்சி செய்தால் நல்லது.