இந்த நோய் ஜப்பானிய மூளை காய்ச்சல் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் இப்போது மறுவாழ்வு கட்டத்தில் இருக்கிறான். ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் வைரஸால் (Japanese encephalitis virus) ஏற்படும் இந்த நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி கொசுக்களால் பரவும் ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் வைரஸ் (JEV) என்பது டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ்களுடன் தொடர்புடைய ஒரு ஃப்ளேவி வைரஸ் (flavivirus) ஆகும்.
இந்த JEVஆனது பல ஆசிய நாடுகளில் வைரஸ் மூளை காய்ச்சல் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. மழைக்காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் பரவுதல் தீவிரமடைகிறது. உலக முழுவதும் ஆண்டுதோறும் சராசரியாக கிட்டத்தட்ட 68,000 ஜாப்பனீஸ் என்செஃபலிடிஸ் பாதிப்புகள் பதிவாகின்றன. இந்நோய் தொற்று ஏற்படுத்தும் அறிகுறிகள் பொதுவாக மிகவும் லேசானவை. ஆனால் அரிதாக இது மூளையை பாதிக்க கூடிய வகையில் மிக கடும் அறிகுறிகளை ஏற்படுத்தும். தீவிர அறிகுறிகள் என்னும் போது திடீரென அதிகரித்த காய்ச்சல், அதீத தலைவலி, கழுத்து தசை இறுக்கம் (கழுத்தில் விறைப்பு), வலிப்பு, கோமா மற்றும் ஸ்பாஸ்டிக் பக்கவாதம், நடத்தை தொந்தரவுகள், மனநல பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்பட கூடும்.
இந்தியாவில் இந்த நோய் அரிதாக உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, இதன் அறிகுறிகள் உள்ளவர்களில் இறப்பு விகிதம் 30% வரை அதிகமாக இருக்கலாம். அதே நேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக மூளையழற்சியால் பாதிக்கப்பட்டவர்களில் 30% - 50% பேர் நிரந்தர நரம்பியல் அல்லது மனநல சிக்கல்களை ( சில நிரந்தர மூளை அல்லது மனநல குறைபாடு) அனுபவிக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களில் சுமார் 20% - 30% பேர் அறிவுசார் செயல்பாடு, நடத்தை அல்லது நரம்பியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதில் மீண்டும் மீண்டும் வலிப்பு, பக்கவாதம் அல்லது பேச இயலாமை போன்றவை அடங்கும்.
அதே சமயம் இந்த தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் உதவுகின்றன. தற்போது inactivated Vero cell-derived, inactivated mouse brain-derived, live attenuated மற்றும் live recombinant (chimeric) என்ற நான்கு முக்கிய வகை JE தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நம் நாட்டில் JE தடுப்பூசி குழந்தை பருவத்தில் 2டோஸ்களில் கொடுக்கப்படுகிறது. 9 மாதங்கள் - 1 வயது வரை இருக்கும் போது முதல் டோஸ் மற்றும் 16 மாதங்கள் - 2 வயது வரையில் இரண்டாம் டோஸ் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி பெரியவர்களும் செலுத்தப்படுகிறது. கொசு கடியிலிருந்து தப்பிப்பதன் மூலம் கொசுக்கள் பெருகுவதற்கு இடம் கொடுக்காமல் நடவடிக்கை எடுப்பதன் மூலமும் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலைத் தடுக்கலாம்.