இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் அங்கமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ICMR) நாடு முழுவதும் பரவும் சளி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
SARI எனப்படும் தீவிர சுவாசத் தொற்று பிரச்னை கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாச கோளாறு அறிகுறி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவையும், 7 சதவீதம் பேருக்கு ICU சிகிச்சையும் தேவைப்படுகிறது.
இந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க செய்யகூடியவை, செய்யக்கூடாதவை என்ற பட்டியலை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைவரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும், கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது. உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மாத்திரை போட்டுக்கொள்ளாலாம்.
முன்னதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு இந்த தொற்று பரவல் குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த பருவ கால காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படுகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம் என்றுள்ளது.