கோடை காலம் தொடங்க ஆரம்பித்ததில் இருந்தே வெயில் மண்டையை பிளக்கிறது. கொளுத்தும் வெயிலில் கொஞ்சம் குளுகுளுவென இருக்க ‘ஜில்லுன்னு எதையாவது குடிச்சா நல்லா இருக்கும்’ என்ற அடிக்கடி தோன்றும்.
எனவே போன மாசம் வரை அடிக்கடி குடித்து வந்த டீ, காபிக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு கடைகளை தேடி அலைவோம். ப்ரிட்ஜில் கூட தயிர், மோர் தான் நிறைந்திருக்கும்.
ஆனால் கோடை வெப்பத்தை சமாளிக்க வெறும் மோர் மட்டும் போதாது. வெப்பத்தைத் தணிக்கவும், உடலை நீரேற்றம் செய்யவும், செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கவும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் கோடை கால பானங்கள், உற்சாக பானமாக மாறலாம். கடும் கோடை மாதங்களில் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருக்க உதவும் 5 கோடைகால குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்...
தேங்காய் தண்ணீர், எலுமிச்சை மற்றும் புதினா பானம்:
கோடை வெயிலை சமாளிக்க இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் குடிப்பது சிறந்தது என்றாலும், அத்துடன் வைட்டமின் சி சத்தும், புத்துணர்ச்சிக்கு துளியூண்டு புதினாவும் சேர்க்கும் போது கிடைக்கும் உற்சாகமே தனி தான். இதை தயாரிப்பதும் மிகவும் சுலபமானது.
செய்முறை:
ஒரு கிளாஸில் இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரை ஊற்றிக்கொள்ளுங்கள். அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சில புதினா இலைகளை தூவி, ஐஸ்கட்டிகளை கலந்தால் குளுகுளு பானம் ரெடி.
தர்பூசணி-சிட்ரஸ் டிடாக்ஸ் பானம்:
கோடை காலத்தின் வரப்பிரசாதமான தர்பூசணி பழத்தை அப்படியே சாப்பிட்டால் கூட அமிர்தம் போல் இருக்கும். ஆனால் அதை இன்னும் புத்துணர்ச்சியூட்டக்கூடிய பானமாக மாற்ற விரும்பினால், இப்படி செய்து பாருங்கள்.
செய்முறை:
ஒரு கப் தர்பூசணி, பாதி அளவு எலுமிச்சை சாறு, சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை இரண்டு டம்பளர் ஐஸ் வாட்டர் உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி குடிக்கலாம்.
பச்சை குளோரோபில் பூஸ்டர்:
இந்த உற்சாக பானம் கீரைகள், மைக்ரோகிரீன்கள், இஞ்சி ஆகியவை கலந்தது. இது உங்கள் சருமத்திற்கும், வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றலுக்கு மிகவும் நல்லது.
செய்முறை:
1 கப் கீரை, புதினா இலைகள், 1 கப் மைக்ரோகிரீன்ஸ், சிறிய துண்டு இஞ்சி, 1/2 கப் பச்சை ஆப்பிள், 1 கப் அன்னாசி துண்டுகள், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பிளெண்டரில் கலந்து, சிறிது ஐஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து பருகி மகிழுங்கள்.
அன்னாசி மற்றும் செம்பருந்தி ஐஸ் டீ:
செம்பருத்தி கோடை பானத்திற்கு ஏற்ற சிறந்த தேர்வு, ஏனென்றால் இதில் உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய பண்புகள் நிறைந்துள்ளன. அன்னாசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கும் பண்புகள் உள்ளன. இந்த இரண்டையும் கலந்து சூப்பரான ஐஸ் டீ செய்வது எப்படி என பார்க்கலாம்.
செய்முறை:
4 அல்லது 5 செம்பருத்தி இதழ்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதனை சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, குளிர்வித்துக்கொள்ளுங்கள். அத்துடன் 1 கப் நறுக்கிய அன்னாசி துண்டுகள், சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சி ஆகியவற்றை கலந்தால், உங்கள் உற்சாக பானம் தயாராகிவிடும்.