அஸ்வகந்தா நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான மருத்துவ மூலிகையில் ஒன்று. கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான மூலிகை பொருட்களில் ஒன்று. அஸ்வகந்தாவின் வேர்கள் மற்றும் பழங்கள் பல்வேறு மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். 'அஸ்வகந்தா' என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டது மற்றும் இதன் பொருள் "குதிரை மற்றும் வாசனை" என்பதாகும்.
இதன் வேர்களை நாம் பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், பல நன்மை ஏற்படும். தற்போது சந்தைகளில் அஸ்வகந்தா பொடியும் கிடைக்கிறது. அஸ்வகந்தா நமது உடலில் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அஸ்வகந்தாவில் உள்ள சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நினைவாற்றலை மேம்படுத்துகிறது : அஸ்வகந்தா அறிவாற்றல், நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. அஸ்வகந்தா அறிவாற்றலை கணிசமாக மேம்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 -யில் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் படி,ஆய்வில் பங்கேற்பாளர்களின் கவனத்தை அஸ்வகந்தா அதிகரித்தது, அத்துடன் அவர்களின் ஒட்டுமொத்த நினைவாற்றாலையும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது : தினமும் ஒரு கப் அஸ்வகந்தா பொடி கலந்த தேநீர் குடிப்பதன் மூலம் இதயத்தில் தமனிகளில் ரத்தகுழாய் அடைப்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஆயுர்வேதத்தில் வெளியிடப்பட்ட சில ஆய்வுகள், அஸ்வகந்தா VO2-ன் அளவை உயர்த்தும் என்று கண்டறிந்துள்ளனர். இது மிக உயர்ந்த அளவிலான ஆக்ஸிஜன் ஆகும். எனவே உங்கள் உடல் உழைப்பின் போது இதயம் மற்றும் நுரையீரல் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் பணியை அஸ்வகந்தா மேம்படுத்துகிறது. எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைக்கிறது : அஸ்வகந்தா இன்சுலின் சுரப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அஸ்வகந்தா சிறந்த மூலிகையாகும். சில மருத்துவ ஆய்வுகள் அஸ்வகந்தா இரத்த குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் அளவை குறைப்பதில் நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. டைப் 2 நீரிழிவு மருந்துகள் இரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகளை அஸ்வகந்தாவுடன் ஒப்பிட முடியும் என ஒரு 2000ல் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளனர். அஸ்வகந்தா ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது, இவை உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க முடிகிறது.
சருமம், முடி பிரச்சனைகளுக்கு : தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக தோல் புத்துயிர் பெறுகிறது. மேலும் முடி உதிர்தல் பிரச்சினையை சமாளிக்க அஸ்வகந்தா மிகவும் முக்கியமான மூலிகையாக கருதப்படுகிறது. இது மெலனின் இழப்பிலிருந்து முடியைப் பாதுகாத்து முடி வேர்களை பலப்படுத்துகிறது.
மன அழுத்தத்தை குறைகிறது : அனைவரும் தம் அன்றாட வாழ்க்கையில், ஏதேனும் ஒரு காரணத்தினால் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அஸ்வகந்தாவை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். பைட்டோமெடிசின் இதழில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வில் அஸ்வகந்தாவின் மன அழுத்தத்தை குணமாக்கும் தன்மை பெற்றது என குறிப்பிட்டுள்ளது.