ஆரோக்கியமான வாழ்வியல் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே சர்க்கரை நோயை தடுக்க முடியும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ நாம் கடைப்பிடிக்கும் சில உணவுப் பழக்கங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக நாம் சாப்பிடும் உணவு ஆற்றலாக மாறுவதை தடுக்கும் வகையில் பாதிப்பு ஏற்படுகிறது.
தினசரி தயிர் சாப்பிடுவது: தயிரில் ப்ரோபயாடிக் சத்து மிகுதியாக உள்ளது. தற்போதைய கோடைகாலத்தில் நம் குடலுக்கு குளிர்ச்சியூட்டுவதற்கு அவசியமான உணவாக தயிர் இருக்கிறது. இதனால், எல்லோருமே தயிரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால், தினசரி தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும், மெடபாலிச நடவடிக்கைகள் மாற்றம் அடையும் என்றும் ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.
இரவில் அதிக உணவு : இன்று பெரும்பாலானவர்கள் இரவு தூங்கப் போகும் சமயத்தில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நாம் சாப்பிடும் உணவு செரிமானம் அடைவதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. இரவில் தாமதமாகவும், அதிகமாகவும் சாப்பிடுவதால் நம் கல்லீரலுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அதிகப்படியாக சாப்பிடுவது : வகை, வகையான உணவுகளை பார்த்த உடன் தேவைக்கு மிகுதியாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. நம் பசி எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக உணவை சாப்பிட்டால் தேவையற்ற உடல் பருமன், கொலஸ்ட்ரால் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.
பசியின்றி சாப்பிடுவது : நம் உடலுக்கு உணவு தேவை என்றால் பசி என்ற சிக்னல் தாமாகவே உருவாகிவிடும். ஆனால், பசி இல்லாதபோதும் எதையாவது கொரித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு அடுத்த அரை மணி நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மணிக்கு ஒருமுறையாவது ஒரு டீ, சில ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடாவிட்டால் உலகமே இருண்டது போல ஆகிவிடும்.
இவ்வாறு தேவையின்றி சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சுரப்பு குறைந்து அதன் காரணமாக நீரிழிவு பிரச்சினை ஏற்படும். இது தவிர உடல் இயக்கமற்ற நிலை, போதுமான தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ் போன்ற காரணங்களாலும் நீரிழிவு பாதிப்பு ஏற்படும். கட்டுப்பாடற்ற வகையில் மது அருந்தும் நபர்களுக்கும் நீரிழிவு நோய் எளிமையாக வந்துவிடும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துவது நீரிழிவை தடுக்க உதவியாக அமையும்.