பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்பது செரிமானப் பாதையின் இறுதியில் அமைந்துள்ள பெருங்குடல் அல்லது மலக்குடல் பகுதியில் ஏற்படுவதாகும். இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படக் கூடிய மரணங்களின் எண்ணிக்கையில் இந்த நோய் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது. மலக்குடலின் உட்புறச் சுவர்களில் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சி அடைவதும், அவை அபாயம் நிறைந்த கட்டிகளாக மாறுவதும்தான் புற்றுநோய் என்று குறிக்கப்படுகிறது.
புற்றுநோய்க்கான காரணம் என்ன ? மலக்குடல் புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட காரணம் எதுவும் கிடையாது என்றாலும், ஒருவரின் மோசமான வாழ்வியல் பழக்கங்களே இதற்கு காரணமாக அமைகின்றன என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வினய் சாமுவேல் கெய்க்வாத் தெரிவித்தார். குருகிராம் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் பணிபுரியும் இவர், புற்றுநோய் உருவாகுவதற்கான அபாயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அறிகுறிகள் : உடல் சோர்வு அல்லது உடல் எடை இழப்பு ஏற்படுவது மலக்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அத்துடன் வயிற்றுப் பகுதியில் உப்புசம் மற்றும் பிடிப்பு போன்ற நீடித்த தொந்தரவுகள் ஏற்படுவதும், செரிமானக் கோளாறு ஏற்படுவதும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். ஒருவர் மலம் கழிக்கும்போது அதனுடன் வெளிர் சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியானால், அவர்களது மலக்குடலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது என்று அர்த்தம். இதுவும் புற்றுநோய்க்கான அறிகுறிதான்.
முன்கூட்டியே கண்டறிய வேண்டும் : மலக்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமாக அதன் விளைவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் வினய் சாமுவேல் தெரிவித்தார். தினசரி உடற்பயிற்சி செய்வது, புகைப்பிடித்தலை நிறுத்துவது, மதுவை குறைத்துக் கொள்வது, நார்ச்சத்து காய்கறி உணவுகளை அதிகரிப்பது போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் வேறு காரணங்கள் : உடல் இயக்கமின்றி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்வது, வயது முதிர்வு, நோய் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது, உடல் பருமன், கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது போன்றவை புற்றுநோய் அபாயம் அதிகரிக்க காரணம் ஆகும். பதப்படுத்தப்பட்ட, புகையூட்டப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.