கேன்சர் கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை பெற்று குணமடைந்த இனப்பெருக்க வயதுடைய பெண்களின் மனதில் பொதுவாக பல கேள்விகள் எழுகின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று கேன்சர் சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்க முடியுமா என்ற கேள்வி தான். கேன்சர் சிகிச்சைக்கு பிறகும் இனப்பெருக்க வயதுடைய ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும் கேன்சர் சிகிச்சை பெற்ற பெண் கருவுறுவதற்கான சாத்திய கூறுகள் என்பது பெரும்பாலும் வயது, புற்றுநோயின் வகை மற்றும் ஸ்டேஜ் மற்றும் சிகிச்சை முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. அதே போல கேன்சர் ட்ரீட்மென்ட்டிற்கான காலம் என்பது குறிப்பிட்ட கேன்சர் வகை மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நெறிமுறைகளை பொறுத்து மாறுபடும். ஒருசில புற்றுநோய் சிகிச்சைகள் கருவுறுதல் விகிதத்தை குறைக்கலாம் என்று கூறும் நிபுணர்கள் மற்றப்படி வேறு சிகிச்சைகள் கருவுறுதலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனர்.
சிகிச்சையின் போது பெண்கள் கருத்தரிக்கலாமா.! : கேன்சர் நோயாளிக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி மருந்துகள் கருவில் வளரும் குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தவிர வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிறவி குறைபாடுகள் அல்லது வேறு தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே கேன்சருக்கான சிகிச்சையின் போது பொதுவாக பெண்கள் கருத்தரிக்க அனுமதிக்கப்படுவதில்லை. கருத்தரிக்க விரும்பினால் கேன்சர் சிகிச்சைகள்முற்றிலும் முடியும் வரை காத்திருப்பது அவசியம் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணரும், மெடிக்கல் ஆன்காலஜி கன்சல்ட்டுமான பூனம் பாட்டில்.
மேலும் கர்ப்பம் தரிக்க இந்த இடைவெளியை எடுத்து கொள்வது கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக முன்னெடுத்து செல்லவும், பிறக்க போகும் புதிய குழந்தையை நன்கு பராமரிக்க மற்றும் தாய்மையை அனுபவிக்க குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும். அதேபோல இனப்பெருக்க வயதில் இருக்கும், கேன்சர் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்போது கருத்தரிப்பது பாதுகாப்பானது என்பதை தீர்மானிக்க குறிப்பாக ஏதேனும் பராமரிப்பு சிகிச்சையில் இருந்தால் மருத்துவர்களுடன் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.
உதாரணமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை பொறுத்தவரை, நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக கீமோதெரபிக்கு பிறகு ஹார்மோன் சிகிச்சையை பெற வேண்டியிருக்கலாம். அதேபோல சில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சிகிச்சையை தாற்காலிகமாக நிறுத்தி விட்டு கருத்தரித்த பின் தேவைக்கேற்ப மருந்துகளை மீண்டும் எடுத்து கொள்ள வேண்டியிருக்கலாம். அதே நேரம் ஓவரி மற்றும் யுட்ரஸ் கேன்சரால் பாதிக்கப்பட்ட மற்றும் இந்த உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பெண்களால் மீண்டும் கருத்தரிக்க முடியாது.
கீமோதெரபி சிகிச்சையானது வயது மற்றும் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் அடிப்படையில் ஒரு பெண்ணின் முட்டைகளை சேதப்படுத்தும். எனவே கீமோதெரபி தொடங்கும் முன் ஃப்ரீஸிங் எக்ஸ், எம்ப்ரொய்ஸ் அல்லது ஓவரிஸ் இம்பிளான்டட் போன்ற சில அசிஸ்ட் ரீப்ரொடக்ட்டிவ் டெக்னிக்ஸ்கள் உள்ளன. அதே போல கேன்சர் சிகிச்சைக்கு பின் கருவுறும் திறன் மற்றும் ஆரோக்கிய கர்ப்பத்தை சுமக்கும் திறன் ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணுக்கு மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கேன்சருக்கான சிகிச்சைக்கு பின் கருத்தரித்தல் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்தது.