H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (Avian influenza) நாட்டில் அதிகரித்து வருகிறது. முன்னர் அறிவித்தபடி, இந்த வைரஸ் காரணமாக ராஜஸ்தானில் மட்டும் 400க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. தற்போது வரை, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மத்தியப் பிரதேசம் (Himachal Pradesh, Rajasthan, Kerala and Madhya Pradesh) உள்ளிட்ட மொத்தம் நான்கு மாநிலங்கள் ஏவியன் எனும் பறவை காய்ச்சலால் (Avian influenza) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் காகம் மற்றும் மயில்கள் திடீரென இறந்ததற்கு பறவைக்காய்ச்சல் காரணமாக இருக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பறவை காய்ச்சல் பரவும் விதம் : இந்த வகை இன்ஃப்ளூயன்ஸா முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட பறவையுடன் மக்கள் நேரடி தொடர்பு கொள்வதால் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படலாம். இந்த நோயை முதன்மையாக பரப்புவது வான்வழி சுவாச துளிகள்தான். ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் மற்றவர்களிடமிருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி வைப்பதை உறுதி செய்ய வேண்டும், இப்படி செய்தால் அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது.
பறவை காய்ச்சலின் அறிகுறிகள் : ஏவியன் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளில் சில இருமல், காய்ச்சல், தொண்டை புண், தசை வலி, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். ஒரு நபருக்கு இந்த அறிகுறிகள் இரண்டு முதல் எட்டு நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் முதலில் அவர் ஒரு சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். பின்னர் சோதனை மூலம் இந்த காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்படக்கூடியவர்கள் : பறவைகளுடன் நெருக்கமாக பணியாற்றும் மக்களுக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. கோழி பண்ணை தொழிலாளர்கள், விலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர்கள், வனவிலங்கு உயிரியலாளர்கள், பறவையியலாளர்கள் (poultry farm workers, animal control workers, wildlife biologists, ornithologists) போன்றவர்கள் இதனால் பாதிப்படையலாம். இந்த பகுதிகளில் பணிபுரியும் மக்கள் பறவைகளை கையாளும் போது கை, மூக்கு மற்றும் வாயை மாஸ்க்கால் மூடிக்கொண்டு பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் சுமார் 1800 புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்தன. இந்த பறவைகளில் பெரும்பாலானவை பார்-ஹெட் வாத்துக்கள் (bar-headed geese) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பறவைகள் பாங் அணை ஏரி சரணாலயத்தில் (Pong Dam Lake sanctuary) காணப்பட்டன. இது தவிர, கேரளாவின் கோட்டயத்தில் சுமார் 1500 வாத்துகள் ஏவியன் காய்ச்சல் காரணமாக இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.