உடலின் ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு கொலஸ்ட்ரால் அவசியம்தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக உயரும்போது உயிருக்கே ஆபத்தாக மாறும். அதாவது கெட்ட கொலஸ்ரால் என்று சொல்லக்கூடிய low-density lipoprotein cholesterol (LDL) அளவு அதிகரிக்கும்போது உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். இது இதயத்தை பாதித்து இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்பதால் கொழுப்பு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு கொலஸ்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகளை நீங்கள் உணரக்கூடும். அவை என்னென்ன பார்க்கலாம்.
புற தமனி நோயில் peripheral artery disease (PAD) கவனமாக இருங்கள் : கொழுப்பு அதிகமாக சேரும்போது அது இரத்தக் குழாய்களில் தேங்கி இரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதற்கு peripheral artery disease (PAD) என்று பெயர். இந்த தருணங்களில் கீழ் பாகங்களான இடுப்பு முதல் கால் பாதம் வரையில் இரத்தம் ஓட்டம் கிடைப்பது தாமதமாகும். இதனால் சீரற்ற இரத்த ஓட்டத்தால் பாதிக்கப்படுவீர்கள். இதன் காரணமாக நடக்கும்போது கால் வலியால் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள். நடப்பது மட்டுமன்றி குறிப்பிட்ட வேலைகளை செய்தாலும் கூட கால் வலி உண்டாகும். இப்படி உணர்ந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பாதம், கைகளில் வீக்கம் மற்றும் நிறம் மாற்றம் : மேலே கூறியதுபோல் உங்களுக்கு உடலின் கீழ் பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைக்காத போது கால் மற்றும் பாதங்களின் நிறம் மாறக்கூடும். நீங்கள் உங்கள் கால்கள் திடீரென நீல நிறம் அல்லது வெளிறிய சாம்பல் நிறங்களின் இருப்பதை உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதால் இப்படி நிறம் மாறும். நிறம் மாற்றம் மட்டுமன்றி மரத்துப்போதல், பலவீனமாக உணர்தல், குளுர்ச்சியான உணர்வு , நடப்பதற்கு சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டதாக அர்த்தம் என மையோக்ளீனிக் தகவல் கூறுகிறது.
சருமத்தில் அலர்ஜி : ஆங்காங்கே கொழுப்பு சேர்ந்து தேக்கம் அதிகரிக்கும்போது அதன் அறிகுறிகள் சருமத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்படி நீங்கள் சிரங்கு, மஞ்சள் நிறத்தில் கொழுப்பு அடங்கிய புடைப்பு போல் சருமத்தின் மேல் உருவாகும். சிலருக்கு கண்களின் ஓரத்தில் புடைப்புகள் தோலை ஒட்டி வளரும். உள்ளங்கைகளில் கோடுகள் தோன்றும். கால்களில் கூட கொழுப்பு சேர்ம கட்டிகள் தோன்றக்கூடும்.