தனித்துவ சுவை மற்றும் நறுமணம் கொண்டுள்ள பெருங்காயம், பெரும்பாலான இந்திய குடும்பங்களின் கிச்சன் அலமாரிகளில் பொதுவாகக் காணப்படும் மசாலாவாகும். முதன்முதலில் 16-ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலிருந்து முகலாயர்களால் பெருங்காயம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் குணாதிசயங்கள் வெறும் உணர்வு சார்ந்தவை அல்ல, ஆரோக்கிய பண்புகளையும் கொண்டுள்ளது.பெருங்காயம் ஒரு குறிப்பிட்ட வகை பெருஞ்சீரகத்திலிருந்து பிசினாக பெறப்படுகிறது. பின் நாம் பயன்படுத்தும் வகையில் சுவையூட்டும் பொருளாக மாற்றப்படுகிறது. மேலும் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் இந்திய உணவு வகைகளில் பெருங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நமது உணவை மிகவும் சுவையாக்குவதோடு மட்டுமின்றி வயிற்றை லேசாகவும் மாற்றுகிறது பெருங்காயம் என கூறப்படுகிறது. இது தவிர பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பெருங்காயத்தை நம் உணவில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை பற்றி கூறி இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா (Lovneet Batra).
செரிமானத்திற்கு உதவுகிறது: பெருங்காயம் என்பது இயற்கையிலேயே காரமானது. எனவே நமக்கு பிடித்த ருசியான உணவுகளில் சேர்க்கப்படும் ஹெவியான பொருட்களால் ஏற்படும் அசிட் ரிஃப்ளக்ஸை பெருங்காயம் தடுக்கிறது. உப்பசம், வாய்வு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் இயக்கங்களைக் குறைக்க பழங்காலத்திலிருந்தே பெருங்காயம் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாதவிடாய் நேர பிடிப்புகளை தணிக்கிறது: ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா கூறுகையில், பெருங்காயத்தில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அசாதாரண பிடிப்புகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்டவற்றில் இருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும் என்கிறார். ஏனெனில் பெருங்காயம் ஒரு இயற்கையான பிளட் தின்னராக (natural blood thinner) கருதப்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள கூமரின் என்ற வேதிப்பொருள் ரத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, அதனை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. அதன் இந்த பண்பு ரத்த ஓட்டத்தை சீராக செய்து வயிற்று வலியை குறைக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது: உணவுகளில் பெருங்காயம் சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார் லோவ்னீத் பத்ரா. இன்சுலின் சுரக்க கணைய செல்களை பெருங்காயம் தூண்டுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். உணவுகளில் பெருங்காயம் சேர்ப்பதன் சில குறிப்பிட்ட நன்மைகள் மேலே சுட்டிக்காட்டப்பட்டாலும் கூட ஆஸ்துமா நோயாளிகளுக்கும் பெருங்காயம் உதவுகிறது.
மாதவிடாய் சிக்கல்கள் தவிர கர்ப்பை பிரச்சனைகள், பாலுணர்வை தூண்டுதல் போன்ற விஷயங்களுக்கும் பெருங்காயம் அருமருந்தாக செயல்படுகிறது. தவிர பெருங்காயம் முகப்பருவைக் குறைக்க உதவும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு உற்பத்தியை குறைக்க செயல்படுகின்றன. அதேசமயம், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் ரேஷஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.