மஞ்சள் மங்களகரமானப் பொருள்களில் ஒன்று. அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லாது இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பிரதானமான பொருளாகவும் உள்ளது மஞ்சள். சைவம், அசைவம் என எந்த சமையலிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கப்படும். இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு இருப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் பாலில் அல்லது சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மில்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை உபயோகிக்கலாம். இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதோடு வேறு என்னென்ன பாதிப்புகள் உள்ளது? என தெரிந்துக்கொள்வோம்.
மஞ்சளில் பல்வேறு நோயெதிர்ப்பு பண்புகள் மட்டுமில்லாது தொடர்ச்சியாக மஞ்சளை நாம் சாப்பிட்டு வரும் போது, இதில் உள்ள குர்குமினால் டிமென்சியா என்ற நினைவாற்றல் இழப்பு செயல்திறனை மேம்படுத்த உதவியாக உள்ளது. இருந்தப்போதும் சில நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய நிலையும் உள்ளது.