அன்றாட உணவு தயாரிப்பில் தவறாமல் இடம்பெறும் ஒரு மசாலா என்றால் மஞ்சள் தூள். கிருமிநாசினியாகவும், உணவுக்கு சுவையூட்டியாகவும் இருக்கும் மஞ்சள்தூள், நம் நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருளாகவும் உள்ளது. அந்தவகையில், நாள்தோறும் பயன்படுத்தும் மஞ்சள் தூள் தரமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
கடுகு, கொத்தமல்லி, சாம்பார்தூள், மஞ்சள்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது. அதிகப்படியான லாபத்துக்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் இந்த மோசமான செயல் பலரின் உடல் நலத்தை பாதிக்கிறது. அந்தவகையில் நீங்கள் நாள்தோறும் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் எவ்வாறு கலப்படம் செய்யப்படுகிறது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் தூள் கலப்படம் : சமையலறையில் தவிர்க்கமுடியாத பொருளாக இருக்கும் மஞ்சள் தூள், சுவையூட்டியாக மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுகிறது. சளி, இருமல் மற்றும் புண்ணுக்கு மருந்தாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் மஞ்சள் தூளில், இரண்டு விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. சுண்ணாம்பு, அரிசி மாவு, ஸ்டார்ச் பவுடர் ஆகியவற்றை கலந்து மஞ்சள் தூளில் கலப்படம் செய்கின்றன. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும் ஊட்டசத்து இருக்காது. மற்றொரு முறையில், பளீச்சென்ற கலர் மற்றும் மினுமினுப்பை கொடுப்பதற்காக 'லெட் குரோமேட்' மஞ்சள் நிற மெட்டானில் (metanil yellow) என்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது.
விஷத்தன்மை வாய்ந்த இந்த ரசாயனங்களை சாப்பிடும்போது ரத்தச்சோகை, குறைப்பிரசவம், மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கலப்பட மஞ்சள் தூள் மற்றும் நல்ல மஞ்சள் தூளை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது கடினம். ஒரு சில எளிமையான சோதனைகள் மூலம் கலப்பட மஞ்சள் தூளை கண்டுபிடித்து விடலாம். எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
1. மஞ்சள் மெட்டானில் ரசாயனம் (metanil yellow) : சோதனைக் குழாய் ஒன்றை எடுத்து சிறிதளவு மஞ்சளை அதில் போட்டுக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு செறிவூட்டப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரையும் சேர்க்கவும். பின்னர், சோதனைக்குழாயை வேகமாக அசைத்து பாருங்கள். சோதனைக் குழாயில் இருக்கும் மஞ்சள் தூள் இளம்சிவப்பாக மாறினால் நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் மெட்டானில் ரசாயனம் கலந்துள்ளது என்பது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். லட்டு, பிரியாணிகளில் கலர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. மெட்டானில் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடும்போது குமட்டல், வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும்.
3. தண்ணீர் சோதனை : மஞ்சளில் கலப்படம் இருப்பதை தண்ணீரைக் கொண்டு எளிமையாக கண்டுபிடித்து விடலாம். கண்ணாடி டம்ளர் ஒன்றில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதனுடன் மஞ்சளை சேர்க்க வேண்டும். கலக்க வேண்டாம். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அதனை மீண்டும் பார்க்கும்போது மஞ்சள் டம்ளரின் அடிப்பகுதியில் சேர்ந்திருந்து தண்ணீர் தெளிவாக இருந்தால், உங்கள் மஞ்சள் சுத்தமானது. கலங்களாகவோ அல்லது மஞ்சள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தாலோ அதில் கலப்படம் உள்ளது.
மஞ்சள் வேர் கலப்படம் : மஞ்சள் தூள் மட்டுமல்லாது வேரிலும் கலப்படம் செய்யப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், மஞ்சள் வேரை எடுத்து தண்ணீரை ஊற்றி கழுவுங்கள். வேரின் நிறம் மாறினால், அந்த மஞ்சள் வேர் ரசாயனத்தால் மெருகூட்டப்பட்டிருக்கலாம், கலப்பட மஞ்சள் வேர் என்பதை உறுதி செய்யுங்கள். விருப்பப்பட்டால் நீங்கள் வாங்கிய கடைக்காரரிடமும் தெரியப்படுத்தலாம்.