இந்திய சமையலில் பூண்டு தவிர்க்க முடியாதது. அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் கட்டாயம் சேர்க்கப்படும். அது சுவைக்காக மட்டுமன்றி பல உடல் நல ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பலருக்கும் அதன் நன்மைகள் தெரிவதில்லை. அதனால்தான் சுவைக்காகவும் மணத்திற்காகவும் மட்டுமே பூண்டை சமையலில் சேர்த்துவிட்டு சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர். இனி பூண்டை ஒதுக்கும் முன் இந்த நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது : கட்டுப்பாடில்லாத இரத்த அழுத்தம் என்பது பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளை உண்டாக்குகிறது. அதோடு சிறுநீரக செயலிழப்பையும் உண்டாக்குகிறது. எனவே இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க வேண்டியது அவசியம். அதற்கு இயற்கையான வழியாக பூண்டு உள்ளது. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் பூண்டை சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : பூண்டு சளிக்கு நல்ல மருந்து. இதனால் சளியால் ஏற்படும் காய்ச்சல், இருமலைக்கூட தடுக்க முடியும். எனவே பூண்டை அப்படியே சாப்பிடுவதால் தொற்று பாதிப்புகளை தவிர்க்கலாம். குறிப்பாக தொற்று பாதிப்பு உள்ள காலங்களில் காலையில் உணவுக்கு முன் இரண்டு பூண்டை தட்டி மென்று விழுங்குங்கள். நெஞ்சு சளியை முறித்து எடுப்பதிலும் பூண்டு சிறந்தது.