பப்பாளி ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்ற உயர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இவை நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது. செரிமான சிக்கல்களைத் தடுக்க உதவுவதில் இருந்து, நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை, இந்த பழம் உண்மையில் நம் ஆரோக்கியத்தை நல்ல முறையில் மேம்படுத்தும்.
பப்பாளி சாப்பிடுவதை ஒருவர் எந்தளவுக்கு விரும்புகிறார்களோ, அதேபோல நல்ல பழத்தை வாங்குவதில் சிலர் பயப்படுகின்றனர். ஏனெனில் நல்ல இனிப்பு சுவைக்கொண்ட பழுத்த பப்பாளியை தேர்ந்தெடுத்து வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பப்பாளி மட்டும் அல்ல எந்த ஒரு பழத்தையும் வாங்கும் போது சில குறிப்புகளை மனதில் வைத்து வாங்க வேண்டிய அவசியம். எனவே, ஒரு இனிமையான மற்றும் சரியான பப்பாளியைத் தேர்வுசெய்ய உதவும் சில உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நல்ல சுவை கொண்ட பழுத்த பப்பாளியை வாங்குவது எப்படி?பச்சை நிறத் தோல் கொண்ட பப்பாளியை ஒருபோதும் எடுக்க வேண்டாம். எப்போதும் ஆரஞ்சு-மஞ்சள் நிறம் கொண்ட பப்பாளியை தேர்ந்தெடுக்க வேண்டும். சில பப்பாளியில் பச்சை புள்ளிகள் இருக்கும். அதனை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அது நல்லது தான். மேலும் பழம் பழுத்திருக்கிறதா என்பதை காண உங்கள் கட்டைவிரலை பழத்தின் சதைக்குள் மெதுவாக அழுத்த வேண்டும். பழம் அமுங்கினால் பப்பாளி சாப்பிட தயாராக உள்ளது என்று அர்த்தம். அதேபோல, பழத்தில் வெட்டுக்கள், ஏதேனும் கருப்பு நிற மார்க் அல்லது சில இடங்களில் அடிபட்டிருந்தால், அந்த பழத்தினை வாங்காதீர்கள்.
பழுக்காத பப்பாளியை எப்படி பழுக்க வைப்பது? சிலர், பழுக்காத பப்பாளியை வாங்கி அதனை ஸ்டோர் செய்து அந்த பழம் பழுத்த பிறகு சாப்பிடுவர். அப்படி பழுக்காத பப்பாளியை நீங்கள் வாங்கி வந்தால், அதை ஒரு காகித பையில் சுருட்டி வைக்க வேண்டும். இது பழத்தை விரைவாக பழுக்க வைக்க உதவும். நீங்கள் பழத்தை துண்டாக வெட்டியிருந்தாலும் கூட அதை ஒரு காகிதப் பையில் சுருட்டி வைக்கலாம். அதுவே, நீங்கள் வாங்கிய பப்பாளி மிகவும் காயாக இருந்தால் அதனை பழுக்க வைக்க 3 அல்லது 4 நாட்களாவது எடுக்கும். நீங்கள் எப்போதும் பப்பாளியை அறை வெப்பநிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பப்பாளியை பழத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை: ஒரு பப்பாளி பழத்தை வெட்ட எளிதான வழி, அதை ஒரு கட்டிங் போர்டில் வைப்பதன் மூலமும், கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி அதன் மையத்திலிருந்து பாதியாக வெட்டுவதும் ஆகும். இப்போது பழத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒரு கரண்டி உதவியுடன் அதில் உள்ள விதைகளை நீக்க வேண்டும். இந்த விதைகளை நிறைய பேர் சாப்பிடுவார்கள். மற்றவர்கள் வெறுமனே அவற்றை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
நீங்கள் அவற்றை சாப்பிட விரும்பினால், சிறிது நேரம் விதைகளை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனை கழுவிய பின்னர் சாப்பிடலாம். ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதில் நிறைந்துள்ளன. இப்போது பழத்தை செங்குத்தான துண்டுகளாக வெட்டத் தொடங்குங்கள். பழத்தின் தோலை நீக்க ஸ்கின் பீலர் அல்லது வழக்கமான கத்தியைப் பயன்படுத்துங்கள். தோலை நீக்கிய பிறகு சிறிய துண்டுகளாக க்யூப்ஸாக வெட்டி சாப்பிடலாம்.
மேலும் அதனை 2 அல்லது 3 நாட்களில் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களுக்கு அது கெடாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் காற்று புகாத ஒரு கண்டெய்னர் பாக்சில் வைத்து ஸ்டோர் செய்ய வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு அவை உண்ணக்கூடியதாக இருந்தாலும், பப்பாளி அதன் அசல் சுவையை இழக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வெட்டிய பழத்தை 2 நாட்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
பப்பாளியை நீண்ட கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க விரும்பினால், அதை துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் உறைவிப்பான் பைகளில் ஸ்டோர் செய்யலாம். இந்த செயல்முறையில் சுமார் 10 மாதங்களுக்கு பப்பாளியை உறைய வைக்கலாம். தேவைப்படும்போது, சிறிதளவு பழத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உறைந்த பப்பாளியைக் மெருதுவாக்குவதற்கு ஒரு சுலபமான வழி குளிர்சாதன பெட்டியை சுமார் 24 மணி நேரத்திற்கு டிஃபிராஸ்டிங் செய்யலாம். அல்லது உறைந்த பழம் அதன் இயற்கையான நிலைக்கு வரும் வரை ஓரிரு மணிநேரங்களுக்கு வெளியே எடுத்து வைக்கலாம்.