தக்காளி சேர்க்கப்படாத இந்திய சமையல்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தக்காளி இல்லாத சமையல் எப்படி ருசியானதாக இருக்கும்? சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய தக்காளியில் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. தக்காளியை ஜூஸ், சூப், சாலடாகவும் சாப்பிடலாம். அதிலும் தக்காளி பழச்சாறில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், இதயம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மேலும், உப்பு சேர்க்கப்படாத தக்காளி சாறு குடிப்பதால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இதனால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டோக்கியோ மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வு குறித்து, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியான கட்டுரையில், “ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 500 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் 94 பேருக்கு தக்காளி பழச்சாறு குடித்ததால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து சீராக இருந்தது. 125 பேருக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்திருந்தது.
தக்காளி வைட்டமின்கள் நிறைந்தது: தக்காளியில் வைட்டமின் சி 40 சதவிகிதமும் வைட்டமின் ஏ- வும் நிறைந்துள்ளன. இது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகளுக்கு நல்லது. பொட்டாசியம் நிறைந்தது. இதய செயல்பாடுகளுக்கு முக்கியமான ஊட்டச்சத்தாக அமைகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: இதய ஆரோக்கியத்திற்கு தேவையான லைகோபீன் என்று அழைக்கப்படும் ஆண்டிஆக்ஸிடண்ட் தக்காளியில் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, இரத்தத்தில் லைகோபீன் நிறைந்திருந்தால் நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது இதயத்தையும் பாதுகாக்கிறது. புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.