‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’’ என்பது பழமொழி. அது சியா விதைகளுக்கு மட்டும் பொருந்தாமல் போய்விடுமா? ஆன்டிஆக்ஸிடண்ட்கள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் உயர்வகை நார்ச்சத்து அடங்கிய சியா விதைகளை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் பரவலாக அறிந்து வைத்திருப்போம். குறிப்பாக எலும்பு நலன் அதிகரிப்பதில் தொடங்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நலனை மேம்படுத்துவது வரையில் இதன் மூலமாக கிடைக்கின்ற நன்மைகள் ஏராளம்.
வயிறு சார்ந்த பிரச்சினைகள் : நார்ச்சத்து மிக்க சியா விதைகளை சாப்பிடுவதால் செரிமான சக்தி மேம்படும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். அதே சமயம், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். முதன் முதலில் நீங்கள் சியா விதைகளை எடுத்துக் கொள்ளும்போது கொஞ்சமாக எடுப்பது நல்லது. படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம்.
குறைவான ரத்த அழுத்தம் : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அளவுக்கு மீறும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவை இது குறைத்து விடும். ஆகவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்கள் சியா விதைகளை உட்கொள்ளும் முன்பாக மருத்துவரை பரிசீலனை செய்யவும்.
மருந்துகளின் தன்மை பாதிக்கப்படும் : சியா விதைகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சில மருந்துகளை உடல் உள்வாங்கிக் கொள்ள இது தடையாக அமையும். குறிப்பாக ரத்த சர்க்கரையை குறைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனமுடன் இருக்கவும். மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவர்களை பரிசீலனை செய்த பிறகு சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பு : நார்ச்சத்து கொண்ட சியா விதைகளை உடல் எடை குறைப்பவர்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. எனினும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அதிலுள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கக் கூடும். ஆகவே, தேவையான சமயங்களில் குறைவான அளவில் சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.