பொதுவாக உருளைக்கிழங்கினால் செய்யப்படும் உணவுகள் எல்லோருக்குமே ஃபேவரட் தான். உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பஜ்ஜி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கை பாதிவேக்காட்டில் எடுத்து, அதனை எண்ணெயில் பொரித்து, உப்பு மற்றும் மிளகு தூள் தூவி தரப்படும் ஃபிரென்ச் ஃப்ரைஸ் பலருக்கு உயிர் என்று சொல்லலாம். சினிமாவுக்கு சென்றாலும், பீச்சிற்கு சென்றாலும், ஏன் வீட்டில் அமர்ந்து டிவி பார்க்கும் பொழுது கூட ஃபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு.
ஆனால் எந்த ஒரு உணவுமே அதிகப்படியாக எடுக்கும் பொழுது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதற்கு ஃபிரென்ச் ஃப்ரைஸ் விதிவிலக்கல்ல. ஃபிரென்ச் ஃப்ரைஸ் அதிகப்படியாக சாப்பிடுவது உடலுக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். சீனாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஃபிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவது பதட்டத்தை 12 சதவீதம் அதிகரிப்பதாகவும், மனச்சோர்வை ஏழு சதவீதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
அக்ரிலமைடிற்கு நீண்ட காலமாக நம்மை வெளிப்படுத்திக் கொள்வது, பதட்டம் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதோடு விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகப்படியான அக்ரிலமைடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எனினும் மனிதர்களில் இது குறித்த ஆய்வு இன்னும் தேவைப்படுகிறது.
பொதுவாகவே பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. இதுபோன்ற உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தி பதட்டம் மற்றும் மன சோர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். மேலும் இந்த உணவுகளை எண்ணெயில் பொரிக்கும் போது, அதில் உள்ள நீர்ச்சத்து குறைந்து எண்ணெயில் உள்ள கொழுப்பை உறிஞ்சிக் கொள்ளும்.
இந்த உணவை நாம் சாப்பிடும் பொழுது நமது கலோரி அளவு அதிகரிக்கிறது. இதனால் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள், அதிக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு இருக்கும் இது போன்ற பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.