நம் உடலின் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்து இருக்கிறது. தினந்தோறும் கண்ணில் தென்படும் பல வகையான உணவுப் பொருட்களை நாம் வாங்கி சாப்பிடுகிறோம். பிரச்சனை என ஒன்று வரும் வரையில் நாம் எதைப் பற்றியும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நோய் வந்த பிறகு, நாம் எவ்வளவு தான் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முயற்சி செய்தாலும் அதில் போதுமான பலன் கிடைப்பதில்லை. பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாவுச்சத்து உணவுகள் : காலை நேரத்தில் நல்ல சுவையான உணவை வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். குறிப்பாக, அரிசி உணவு, கோதுமை உணவு போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். இதனுடன் சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது. ஆனால், இவை இரண்டுமே உடல் நலனுக்கு ஆபத்தானவை ஆகும்.
சைனீஸ் உணவுகள் : நாள் முழுவதும் வேலை செய்து, களைப்பு அடைந்த பிறகு இரவு உணவாக சைனீஸ் வகை உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். பிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் மஞ்சூரியன் சாப்பிடுவது உங்கள் விருப்பத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால், அதில் அதிக அளவு உப்பு, மசாலாக்கள், சாஸ் போன்றவை சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.