மழைக்காலம் வந்தாலே ஒரு சில உணவுகளை விரும்பி சாப்பிடுவோம்! மழை வரப்போகிறது என்றும், வெப்பம் குறைவான சில்லென்ற காற்று வீசும் நாட்களிலும் தேநீர், காபி சூடான சமோசா, வடை, என்று தின்பண்டங்களை என்று விரும்பி சாப்பிடுவது வழக்கம். மழைக்காலத்தில் நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதால் என்ன உணவு சாப்பிடுகிறோம் எங்கு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் தேவை. அதேபோல ஒரு சில உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. மழை காலத்தில் நீங்கள் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல் இங்கே.
பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகள் : கீரைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகளான லெட்யூஸ், கோஸ், காலிஃப்ளவர் புரோக்கோலி போன்றவற்றை தவிர்ப்பது நியாயமா என்று நீங்கள் சிந்திக்கலாம்! எல்லாவகையான கீரைகளும், பச்சை இலை காய்கறிகளும் மிக மிக ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆய்வின் படி, டயட்டரி ஃபைபர், மக்னீஷியம், ஜிங்க் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ள தாவர உணவுகளில் அதிகமான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் வருவதற்கான சாத்தியமும் இருக்கிறது. அதாவது மழைக்காலத்தில் இந்த வகை உணவுகளில் அதிகமாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இவற்றை பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, நன்றாக சுத்தம் செய்து, உப்பு நீரில் அலசி, முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.
மீன் மற்றும் கடல் உணவுகள் : மீன் மற்றும் கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. பல உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்துக்கள் எனப்படும் நுண் சத்துக்கள் கடல் உணவுகளில் கிடைக்கும். ஆனால் மழைக்காலத்தில் தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகம் இருக்கும் காலத்தில், மீன் சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது ஃபுட் பாய்ஸனை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களின் சுழற்சி சீராக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட மழை காலத்தில் இவ்வகையான உணவுகளைத் தவிர்ப்பது, மீன் மற்றும் கடல் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கும்.
எண்ணெய்யில் பொறித்த மற்றும் அதிக மசாலா நிறைந்த உணவுகள் : மேலே கூறியது போல, மழைக்காலம் என்றாலே, விதவிதமாக சூடாக சமைத்து சாப்பிடப் பிடிக்கும். குறிப்பாக, வறுத்த மற்றும் பொறுத்த உணவுகள் தினசரி உணவுகளில் இடம்பெறும். மழைக்காலம் என்று இல்லாமல், அடிக்கடி பொறித்த உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியமற்றது! ஆனால், மழைக்காலத்தில், ஈரப்பதம் காரணத்தால் உங்களுடைய செரிமான சக்தி முழுமையாக இயங்காது. எனவே, வழக்கத்தை விட செரிமானத்தின் வேகம் குறையும் மற்றும் தாமதமாகும். எனவே, எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகள் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தி, செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம்.
வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் தோல் நீக்கிய பழங்கள் : மழைகாலத்தில் பழங்களை சாப்பிடும் முன்பு, அவற்றை நன்றாக கழுவி, உப்பு நீரில் அலசிய பின்பு தான் சாப்பிட வேண்டும். காற்று, நீர் வழியே தொற்று அதிகமாகவும், வேகமாகவும் பரவும் காரணத்தால், கடைகளில் விற்பனை செய்யப்படும் வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் தோல் நீக்கிய பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். வீட்டிலும் நீண்ட நேரம் பழங்களை வெட்டி வைத்திருக்க வேண்டாம். பழங்களை சாப்பிட வேண்டுமென்றால், சாப்பிடும் நேரத்தில் வெட்டி, ஃபிரெஷ்சாக சாப்பிடுங்கள்.
தள்ளுவண்டி மற்றும் தெருவோரக் கடைகளில் உள்ள உணவுகள் : பானி பூரி, சமோசா, பஜ்ஜி, முதல் தள்ளுவண்டிக் கடைகளில் இட்லி, தோசை, சிக்கன் வரை விரும்பி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. அங்கு உணவு, சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறது என்பதை எல்லா இடங்களிலும் உறுதி செய்ய முடியாது. நீர் தேக்கம் அதிகம் இருக்கும் மழைக்காலத்தில், சுகாதாரம் இல்லாத உணவு மற்றும் கடை இருக்கும் சுற்றுப்புறத்தில் பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். எனவே, இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.